Tuesday, January 25, 2011

எடுத்ததும் கொடுப்பதும்: முன் தோன்றி மூத்த குடி


முன்குறிப்பு: வான(ப்பயண)த்தில் பறந்துகொண்டிருந்தபோது, நண்பர் வினவினார் இப்படி: “எத்தனையோ நல்ல புத்தகங்கள்; கருத்துகளைப் படிக்கிறோம், கிரகிக்கிறோம், குறிப்புகளையும் எடுத்துவைக்கிறோம். இருந்தும் நீண்ட காலத்துக்கு அவை நினைவில் தங்குவதில்லையே, என்ன செய்வது?”

இந்த நண்பர் வெளிப்படுத்திவிட்டாலும், இன்னும் நிறையபேருக்கு இந்த வினா ‘உள்’ளே இருக்கத்தான் செய்கிறது.

என்ன சொல்வது? சற்றே யோசித்தேன்.

பள்ளிப் பருவ நுட்பம் ஒன்று நினைவிலாட……

“நாம் படித்ததை; அறிந்ததை; குறித்துக்கொண்டதை, நமது மொழியில்; நமது சொற்களில் நாமாக எழுதிப் பார்க்க வேண்டும், மறக்காமலிருக்க அது உதவும்” என்றேன்.

அதன்படி, அண்மையில் (விடுமுறையில்) நான் படித்த, பிடித்த கட்டுரை ஒன்றை நினைவுப் பேழையிலிருந்து எடுத்து இங்கே என்மொழியில்; சொற்களில் தருகிறேன்.
‘முன் தோன்றி குடி” என்ற தலைப்பில் அப்துல்ரகுமான் எழுதிய கட்டுரை அது.


தமிழினமும் தமிழ்மொழியும் தொன்மை வாய்ந்தவை என்பது வியப்பிற்கும் பெருமைக்கும் உரியது. தமிழ் ஆதிமொழி.

தமிழின் தொன்மையை கூற வேண்டி வந்தால் கண்ணை மூடிக்கொண்டு ஒரு பழம்பாடல் வரியை அனைவரும் ஒப்பிப்போம். அது: ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி” என்கிற வரி.

இந்த வரியை அறியாத தமிழர்களே இல்லை என்னுமளவுக்கு இந்தச் சொற்றொடர் அழியாப் புகழ் பெற்றது. இதன் புகழ் எந்த அளவுக்கு என்று கேட்டால், இதை எழுதியவர் பெயரோ, இந்தப் பாடலின் மற்ற வரிகளோ பலருக்கும் தெரியாது. அவையெல்லாமும் மங்கிப்போகிற அளவுக்கு இந்த வரி பிரகாசமடைந்துள்ளது.

ஆயினும், இதே பாடல்வரியை வைத்துக்கொண்டு, தமிழை, தமிழர்களை கேலி செய்பவர்களும் உள்ளனர். அவர்களும் தமிழர்களே என்பதுவும் அறிந்து வருந்தத்தக்கது.

“அதெப்படி, கல் தோன்றி ( பின்) மண் தோன்றாக் காலத்து” என்று வருவது சரியாக இருக்கும்?” என்பது அவர்களின் கேலி வினாக்களுள் ஒன்று. ”கல் தோன்றியா பின்பா மண் தோன்றும்?”

அது மட்டுமல்லாமல், வாளோடு முன் தோன்றி மூத்த குடி” என்பது எப்படி சரியாக இருக்கும்? என்பதும் அவர்களின் வினா.

ஒருவேளை, ‘வாலோடு முன் தோன்றி மூத்த குடி’ என்பதாக இருக்குமோ என்று கூறி நகைக்கவும் செய்கின்றனர். உண்மையில் அவர்கள்தாம் நகைப்புக்குரியவர்கள். தன் இனவரலாறு அறிந்திராத அவர்கள் நகைப்புக்குரியவர்தாமே.

இந்தப் பாடல் புறப்பொருள் வெண்பா மாலை என்ற நூலில் காணப்படுகிறது. இதை எழுதியவர் ஐயனாரிதனார் என்பார்.

மனித இன வரலாற்றில், தொடக்கக் காலத்தில் மனிதன் மலையில் தான் வசித்துவந்தான். மலையில்தான் இயற்கை உணவுகளான காய்கனிகள் கிடைத்தன. உறைவிடமாகக் கொள்ள இயற்கையான குகைகளும் வாய்த்தன. தமிழ் அகப்பொருள் திணைகளுள் முதலாவதான ‘குறிஞ்சி’ மலையும் மலைசார்ந்த இடமும் பற்றியதே, தமிழில் ‘கல்’ என்ற சொல் மலையையும் குறிக்கும்.

‘கல் இயங்கு கருங் குற மங்கையர்’ என்று கம்பர் சொல்வதில் வருகிற ‘கல்’லுக்கு, மலை என்றுதான் பொருள். (மலையில் வாழ்கிற கருநிற குறத்தியர்).

ஆக, ‘கல்’ தோன்றி என்பதற்கு ‘மலை தோன்றி’ என்று பொருள். அதாவது மலைவாழ் காலமாகிய ‘குறிஞ்சி வாழ்க்கை தோன்றி’ என்று பொருள்.

ஆதியில் மலையில் வசித்துவந்த மனிதன், பின்னர் ஆடுமாடுகள் உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகளைப் பழக்கி அவற்றை ஓட்டியபடி காட்டுக்கு வந்தான். தமிழ் அகப்பொருள் இலக்கணம், காடும், காடுசார்ந்த இடத்தையும் முல்லை என்று சொல்கிறது.

சரி, “மண் தோன்றாக் காலத்து” என்றால்?
மண் என்பது சிறப்புப் பொருளில் நிலத்தைக் குறிக்கும். குறிப்பாக, விவசாய நிலத்தையே அப்படிக் குறிப்பிடுவர். (“இந்த மண்ணுக்கு என்னமா விளைஞ்சிருக்கு, பாருங்களேன்). ஆக, மண் தோன்றாக் காலம் என்றால், வயல் தோன்றாத காலம், அதாவது, மனிதன் விவசாயத்தை அறியாத காலம் என்று பொருள்படும். வயலும் வயல் சார்ந்த இடத்தை தமிழின் அகப்பொருள் இலக்கணம் ‘மருதம்’ என்றழைக்கிறது.

மலை வாழ்க்கையாகிய ‘குறிஞ்சி’ தோன்றி, வயல் வாழ்க்கையாகிய ‘மருதம்’ தோன்றுமுன்பே ‘முல்லை’யாகப் பூத்தது தமிழினம் என்பதே ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து…’ என்பதற்குப் பொருள்.

மலை வாழ்க்கையில் கற்களையே மனிதன் ஆயுதமாகப் பயன்படுத்தினான்.
உலோகத்தாலான ஆயுதங்களை மனிதன் பயன்படுத்தத் தொடங்கியது ‘காட்டு’வாழ்க்கையில்தான். கி.மு மூவாயிரத்தில் எகிப்தியர்கள் உலோக ஆயுதங்களைப் பயன்படுத்திய காலக்கட்டத்திலோ அதற்குச் சற்று முன்னதாகவோ இந்தியர்களும் உலோகப் பயன்பாட்டை அறிந்திருந்ததாக வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய இனங்களுள் தொன்மை மிக்கது தமிழினமே. முதன்முதலாக இரும்பாலான வாளை செய்தவன் தமிழனே. சேக்ஸ்பியர் “இந்திய வாள்” என்று சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.

இப்போது முழுப்பாடலையும் பார்ப்போம்:
பொய்யகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி.


வையகம் போர்த்த வயங்கொலி நீர் என்பது எதைக்குறிக்கிறது ?

நோவாவின் காலத்தில் மிகப் பெரிய கடல்கோள் ஏற்பட்டு பூமி கடலால் சூழப்பட்டது. (நூஹ்) நோவாவின் பேழையில் இருந்த உயிரினங்களைத் தவிர அனைத்து உயிரினங்களும் அழிந்துபட்டன. இதை பைபிள் உள்ளிட்ட மதநூல்கள் தெளிவாகக் கூறுகின்றன. பின்னர், நோவாவின் சந்ததிகளிலிருந்தே மனித இனம் பல்கிப் பெருகியது.

சில காலம் கழித்து வெள்ளம் வடியத் தொடங்கியது. அப்போது, வெள்ளம் வடியவடிய, உயரமான மலைகள் தானே முதலில் தோன்றும். அதன்பிறகே மண் தோன்றும் அல்லவா!

நோவாவின் பேழையில் இருந்தவர்கள் ஆயுதங்களும் வைத்திருந்திருப்பார்கள் அல்லவா! அதில் வாளும் இருக்கத்தானே செய்யும். அதைத்தான் ஐயனாரிதனார் இப்படிக் குறிப்பிடுகிறார்:
வையகம் போர்த்த வயங்கொலி நீர் – கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே’ வாளோடு
முன் தோன்றி மூத்த குடி


நோவா எனப்படும் நூஹ் தமிழினத்தின் ஆதிமூதாதை எனக் கொள்ள இடமளிப்பதாக ஐயனாரிதனாரின் இந்தப் பிரசித்திப் பெற்ற பாடல் உள்ளது.


பின்குறிப்பு: கவிக்கோ அப்துல்ரகுமானின்,கட்டுரையின் இறுதியில் கூறப்பட்டுள்ள இந்தக் குறிப்பு அறுதியிட்டதோ, உறுதிபட்டதோ அன்று. விவாதத்திற்கு இடமளிக்கும் ஒன்றே என்று நான் நினைக்கிறேன்.

(கவிக்கோவின் சிந்தனை என் எழுத்துகளில்)

1 comment:

அன்பு நிலையம் said...

சிறப்பான கட்டுரை அது... நானும் படித்திருக்கிறேன்...

நீங்கள் பதிந்தமைக்குப் பாராட்டுகள்...