Thursday, January 10, 2008

பூக்களில் உறங்கும் மெளனம்





பூக்களில் உறங்கும் மெளனத்தை வைத்து கவிதையாகப் பேசுமாறு கேட்டிருக்கிறார் நண்பர் சிறில் அலெக்ஸ். இவ்வலைப்பூவில் உறங்கும் மெளனத்தைக் கலைப்பதற்கு முதலில் யோசித்தாலும் எழுதியே விட்டேன் இன்று.
(ஒரே ஒரு எச்சரிக்கை: இது தொடரக்கூடும் என்பது தான்:-))) ).

பூவுக்குள் கவியொன்றே புதைந்தி ருக்கும்
...புன்னகையின் சாந்தத்தைப் போர்த்தி ருக்கும்
நாவுக்கும் தெரியாத நாதத் தென்றல்
...நறுமுகையாய் சிறுவிதையாய் ஒளிந்தி ருக்கும்.
பாவொன்று படம்பிடித்து எழுத வந்த
...பாவலனென் கவிதையிலே இடம்பி டிக்கும்
தாவென்று கேட்போர்க்கு தந்து நிற்கும்
...தனிச்சிரிப்பின் நற்சிறப்பை பூவில் கற்போம்!

வான்சிந்தும் மழைத்துளியில் உழவர் இன்பம்
...வைத்திருக்கும் இறையோனே பூவைத் தந்தான்
தேன்சிந்தும் பூமலரும் காதல் சொல்லும்
...துணைசேரும் உலகத்தில் உயிர்கள் பூக்கும்
தானேந்தும் புன்சிரிப்பைத் தொற்ற வைக்கும்
...தன்மகிழ்வை பிறமுகத்தில் பற்றச் செய்யும்
ஏனென்று கேளாமல் எங்கும் பூக்கும்
...எல்லாமே சமமென்று எடுத்துச் சொல்லும்

பிறப்புக்கும் இறப்புக்கும் பூக்கள் உண்டு
...பொதுவான வெற்றியிலும் ஒருபூச் செண்டு
சிறப்பான செய்கைக்கே பூவின் கூட்டம்
...சேர்ந்துவந்து மாலையாக கழுத்தில் வீழும்!
விருப்பத்தைத் தெரிவிக்கும் காதல் சின்னம்
...வகைவகையாய் நிறமிருக்கும் வார்த்தைக் கேற்ப
பொறுப்பான பேச்செல்லாம் பூவே பேசும்
...பார்த்தாலோ வேறில்லை ஒற்றை மெளனம்.


பேசுகிற பூவுமுண்டு; மழலை என்பார்
...புன்னகையும் பூவினைத்தான் ஒத்தி ருக்கும்
தூசுகளாம் பாவங்கள் தீண்டா முல்லை
...தூய்மையிலும் சொல்வதற்கு வேறு இல்லை
நேசமிகு உள்ளத்தில் மழலைப் பூக்கள்
...நல்குகின்ற மகிழ்ச்சிக்கும் அளவு முண்டோ?
வாசமிகு இளம்பூவில் விதையே மெளனம்
...வளர்ந்தபின்னர் வெளிப்படுமே விருட்சப் பாடல்!







Labels: , , , ,

Tuesday, December 04, 2007

ஒரு பயணத்தின் பின்னால்!

ஒரு பயணத்தின் பின்னால்!


மாடொன்று சினிமா போஸ்டரை சாவகாசமாய்த் தின்றுக்கொண்டிருக்க, சாலையின் குறுக்கே வந்துவிட்ட மொபெட்டை, தன் பீடத்திலிருந்து இறங்கி வந்து வைதுக்கொண்டிருந்தார் போக்குவரத்துக்காவலர்'- என்றெல்லாம் எழுத இடம் தராத ரியாத் மாநகரச் சாலை. பஸ்களும் ஸ்கூட்டர்களும் ஆட்டோவும் இல்லாத சாலையில் கார்களே கார்களை முந்திக் கொண்டிருந்தன. அலுவலகத்தின் உள்ளமர்ந்து சாலையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அலுவலகம் சாத்துவதற்கு ஐந்து நிமிடங்களே இருந்தன. அப்போது அரக்கப் பரக்க வந்த அந்த இரு மண்ணின் மைந்தர்களுடன் பின் தொடரும் ஆடு போல வந்தார் அவர். தமிழர் என்பது தோற்றத்திலேயே தெரிந்தது.

மண்ணின் மைந்தர் தான் முதலில் வாய் திறந்தார்.
"அஸ்ஸலாமு அலைக்கும்!"
"வ அலைக்கும் ஸலாம்" (தொடரும் உரையாடலை நாம் தமிழில் பார்ப்போம்)
"நாளை மதறாஸுக்கு ஏதும் விமானம் உள்ளதா?" என்றார் வந்தவர்.
பொறுப்பாளர் (கஃபீல்) போலத் தெரிந்தார்.

கணினியில் சோதித்த என் சக ஊழியர் மோகன் "இன்று இரவுக்கே உள்ளது" என்றார்.

உடனே அந்த தமிழர் பக்கம் (அவர் தான் பயணி போலும்) திரும்பிய அந்த ஆள் "இன்று இரவு இருக்கிறதாம் - போகிறாயா?" என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

அவருக்கு பதிலளிக்காத அந்த தமிழர் மோகனிடம் தமிழிலேயே "நாளைக்கு இருக்கான்னு பாருங்களேன்" என்றார். ஏதோ சோகம் போல காணப்பட்டார்.

"இல்லீங்க! நாளைக்கு சவூதியா கிடையாது, கல்ஃப் ஏர் தான் - அது உங்களுக்குப் பரவாய்ல்லியா"
"கல்ஃப் ஏர் சுத்திக்கிட்டுப்போவாங்க! - அப்படீன்னா நாளை மறுநாள் சவூதியா இருக்குமா பாருங்களேன்?"
"நாளை மறுநாளெல்லாம் கிடையாது - இதை விட்டா அடுத்து வெள்ளிகெளம தான்"

இதற்கிடையில் சவூதிக்காரர் குறுக்கிட்டு "எஷ் ஃபீ?" ( என்ன சேதி?) என்று கேட்க, மோகன் அவருக்கு விளக்கினார்.

அவர் உடனே "போகணும்னு முடிவு பண்ணி விட்டாய். இன்று இரவே போவதற்கென்ன?" என்று தன் ஊழியரைப் பார்த்துக் கேட்டார்.

அவர் அதற்கு ஏதோ சொல்ல வாய் திறக்குமுன் அங்கு தேனீர் கொண்டு வந்த ரஷீத் அவரை சற்று உற்றுப் பார்த்துவிட்டு
"நீங்க ஜாஃபர் இல்லே? 'சஜினி' ல கூட இருந்தீங்களே?"

"ஆமா ரஷீத் பாய், என்ன மறந்துட்டீங்களா? நாந்தான் இங்க அழைச்சிட்டு வந்தேன்"
"சஜினிலருந்து முடிச்சிட்டு போயிட்டீங்கன்னு சொன்னாங்க, எப்படி இருக்கீங்க?"
"ம் இருக்கேன். நீங்கல்லாம் எப்படி இருக்கீங்க?"
"நமகென்னங்க, அதுபோகட்டும், புது விசாவுல எப்ப வந்தீங்க?, என்ன வேலை?, எங்கே வேலை?"
"வந்து இருபது நாள் தாங்க ஆகுது, இங்க தான் எக்ஸிட் 10ல"
"வந்து இருபது நாள்ல ஊருக்குப் போறேன்றீங்க, ஏதும் எமர்ஜென்ஸியா?"
"அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க, எனக்குப் பிடிக்கலைங்க - முடிச்சுட்டுப் போறேன்"

அதற்குள் என் பக்கம் ரஷீத் திரும்பி ஜாஃபர் பற்றி ஒரு சிறு அறிமுகம் கொடுத்தார். ரஷீதும் நானும் பேசிக்கொண்டிருந்த போது ராஜு (இன்னொரு ஊழியர்) அவரருகில் அமர்ந்துக்கொண்டு "ஏதாச்சும் வேலையில கஷ்டமிருக்கா?" - சக தமிழனுக்கு உதவும் துடிப்பு கிரிக்கெட் ஸ்கோர் தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் போல.

"அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க" என்றவர் மென்று விழுங்கி....
"ஹவுஸ் டிரைவர் வேலை தான். வேலை ஒண்ணும் கஷ்டமில்லீங்க, ஆனால், ரெஸ்ட் இல்லீங்க" என்றார்.

அவர் சொன்ன தோரணையிலும் தொனியிலும் அவர் சொல்வது உண்மை இல்லை என்று விளங்கி விட -
-இப்போது ராஜு அவரை நோக்கி
"நீங்க நம்மாளுங்கறதால கேட்கிறோங்க, ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க இவங்கிட்ட பேசிப்பார்க்கலாம்"

ரஷீத் தொடர்ந்தார்: "ஜாஃபர், புது விசாவுக்கு எத்தனி செலவு பண்ணி வந்திருப்பீங்க, அந்த செலவையாவது எடுக்க வேண்டாமா? - சொல்லுங்க உங்க கஷ்டத்தை - முடிஞ்சா 'ரிலீஸா'வது கேட்டு பேசிப்பார்ப்போம்"

ரிலீஸ் என்கிற ஆங்கில வார்த்தையை காதில் வாங்கிய அந்த ஆள் வேகமாக கடங்காரனை கண்டவன் போல திரும்பி "என்ன பேசுகிறீர்கள்?" என்று ரஷீதைப் பார்த்துக் கேட்க ரஷீத் அதற்கு "வந்து இருபது நாளில் ஊருக்குப் போகிறாரே, ஏன் எதற்கு என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம்"

அந்த ஆள் முழுதுமாக ரஷீத் பக்கமாகத் திரும்பி தன் தலையில் இருந்த குறுவட்டை எடுத்து சரி செய்த படி,
"நீயாவது கேட்டுச் சொல்லு - நான் எவ்வளவோ கேட்டும் எதுவுமே சொல்ல மாட்டேன் என்கிறான்"

ராஜு குறுக்கிட்டு "ரெஸ்ட்டே இல்லை என்று சொல்கிறார்"

"தய்யிப், அதை என்னிடம் சொல்லலாமில்லையா.." என்று கூறியவர் தன் ஊழியரை நோக்கித் திரும்ப அவர் அவசரம் அவசரமாக கைகளை ஆட்டி ரஷீதை நோக்கி "அவங்கிட்ட ஏதும் சொல்ல வேணாம்னு சொல்லுங்க" என்கிறார்.

அவருக்காக உதவ முன்வந்த ரஷீதுக்கும் ராஜுவுக்கும் அதிர்ச்சி. 'என்ன இந்த ஆள் இப்படிச் சொல்கிறார்' என்பது போல.

சன்னமான குரலில் அவரே தொடர்ந்து, 'நான் ஊருக்குப் போனாப் போதுங்க' என்று சொல்ல அதற்கு மேல் அவருக்காக பேச ஏதுமில்லாத ஏமாற்றத்தில் "சரி, உங்க இஷ்டம், கிளம்புங்க" என்று சொல்லி விடுகிறார்.

அதன் பின் ஒருவழியாக அன்றைய இரவு விமானத்துக்கே டிக்கட் வாங்கிக்கொண்டு அவர்கள் சென்று விட்டாலும் நமது அலுவலர்களுக்கிடையில் தூவானம் போல தொடர்கிறது அந்தப் பேச்சு.

"ஆளு முன்ன மாதிரி இல்ல. ஏதொ ஒடஞ்சிப்போயிதெரியறார்" - இது ரஷீத்.
"ஆமாங்க, ஏ...அதோ இருக்கு" - ராஜு தன் பாணியில்

"ஒண்ணு இவர்கிட்டயோ இல்ல அவங்கிட்டயோ ஏதோ விஷயம் இருக்கு" என்கிறார் சைஃபுல்லா - காசாளர்.

"நான் நினைக்கிறேன்..... என்று பலவிதமாக அனைவரும் அதையே அசைபோட்டபடி பேசிக்கொண்டிருக்க கடைசியாக மோகனே,"உண்ம என்னன்னு தெரியாமல் ஆளாளுக்கு பேசிகிட்டிருக்கிறோம் - சரி, சரி, ராஜு சாத்துங்க போலாம்"

புதிய விசாவில் வந்து இருபதே நாட்களில் போக வேண்டுமென்றால்....? என்ன காரணமிருக்கும் - எனக்கும் யோசிக்க யோசிக்க ஒன்றும் சரியாக புலப்படவில்லை அல்லது நிறைய தவறாகப் புலப்பட்டது.

வெளியே வந்து என் வாகனத்தை திறக்குமுன் மகள் வாங்கிவரச் சொல்லியிருந்த ஸ்ட்ராபெர்ரி நினைவுக்கு வர, அருகிலிருக்கும் தமீமி மார்க்கெட்க்கு சென்றேன். அங்கு எனக்கு காத்திருந்த ஆச்சர்யம் போல அவர். அதே ஜாஃபர். சாக்லேட்டுகளை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். "என்னங்க, இன்னும் ஏர்போர்ட் கிளம்பலையா?" என்றேன்.

"தோ, டிரைவர் வண்டியோட வாசல்ல இருக்கிறார், கிளம்பிக்கிட்டே இருக்கேன்" என்றார். முகத்தில் சற்று மலர்ச்சி தென்பட்டது. தூக்கத்திலிருந்து விழித்து முகம் கழுவி வந்தவரைப் போல.

ஒரு குழந்தை போல சாக்லேட்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தவரிடம் கேட்டேன்:
"எத்தன குழந்தைங்க உங்களுக்கு"
மந்தகாசமாய்ப் புன்னகைத்துச் சொன்னார்:

"கல்யாணம் ஆகியே ரெண்டு மாசந்தாங்க ஆகுது".

--------------------oOo------------------------

நன்றி: இஸ்லாம்கல்வி.காம்

Labels:

Monday, February 12, 2007

கல்யாண் என்றொரு சகோதரன்.

கல்யாண் என்றொரு சகோதரன்.

சாகரன் என்கிற கல்யாணுடனான எங்கள் பழக்கத்திற்கு அதிக வயதில்லை என்றாலும் பல வருடங்கள் பழகிய ஒரு அந்நியோன்னிய உணர்வு. இன்னமும் அவருடைய அகால மரணத்தை நம்ப இயலவில்லை.

எப்போதும் உற்சாகத்தைத் தேக்கி வைத்திருக்கும் அந்த முகத்தைப் பார்த்தாலே, பார்ப்பவருக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

இருவாரங்களுக்கொரு முறை தொடர்ந்து எழுத்துக்கூடத்தில் சந்தித்து வந்திருக்கிறோம். எழுத்துக்கூடத்தின் ஒருங்கிணைப்பாளரே அவர்தான்.

(பஃக்ருத்தீன்) பெயரும் பதிவும் தினமலரில் குறிப்பிடப்பட்டதைக் குறித்து முதலில் செல்பேசியில் தொடங்கிய நட்பு.

ஊக்கமூட்டுவதில் மன்னன். "பாராட்டணும்யா, அப்பத்தான் திறமைலாம் வெளிப்படும்" என்பார்.

நல்ல திறமைசாலி. தேன்கூடு திரட்டி மட்டுமில்லாமல், பலப்பல மின் குழுமங்களின் வெற்றிக்கும் பின்னணியில் இருந்தவர். அதிகம் பேசாதவர் எனினும் நண்பர் சுபைர் போன்ற நிறைய பேர்களை எழுதவைத்தவர்.

'உங்களையெல்லாம் நண்பனாக அடைந்ததில் சந்தோஷமடைகிறேன்' என்று
ஒரு முறை
மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் சொல்லியிருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த பட்டிமன்றம் முடிந்ததும், ஓடிவந்து எங்களை கட்டிப்பிடித்துக்கொண்டு "கலக்கிட்ட..யா" என்று பாராட்டிய அந்தக்குரலை இனி கேட்க இயலாது.

இது சுயநலம் தான். எங்களை முன்வைத்தே இந்த இழப்பை சிந்திக்கிறோம். உண்மையில், அவர் வாழ்வின் எல்லா நிலைகளிலும் சிறந்து விளங்கினார். அவருடைய மூன்றே வயதான குழந்தை, இழப்பு அறியாமல், வந்திருந்த ஒரு 'அங்கிளை' விளித்தபோது... அனைவருக்கும் கரை உடைத்துக் கொண்டது கண்ணீர்.

'கூகுள் சாட்'டில் Kalyan J என்கிற பெயர் Not at Desk என்ற குறிப்புடன் இருப்பதை தாங்க முடியவில்லை.

மரணம் என்பது தத்துவமாகவே இருக்கிறது-நெருங்கியவர்களுக்கு வரும்வரை!

ரியாத் வாழ் தமிழர்கள் கல்யாண் விட்டுச்சென்றுள்ள வெற்றிடத்தில் தம் குடும்பத்தில் ஒரு சகோதரனின் இழப்பை உணர்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.

கண்ணீருடன்
லக்கி ஷாஜஹான்
ஹ.பஃக்ருத்தீன்.

Sunday, February 11, 2007

நாகூர் ரூமியின் 'அடுத்த விநாடி'

நாகூர் ரூமியின் 'அடுத்த விநாடி'

தமிழ் எழுத்தாளரும் ஆங்கிலப்பேராசிரியருமான நாகூர் ரூமி எழுதிய இரண்டு நூல்களை நண்பர் ஒருவரிடமிருந்து பல முயற்சிகளுக்குப்பின் வாங்கி வந்தேன். 1). அடுத்த விநாடி 2). இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம். என்நூலகத்தில் வாங்கிச் சேர்க்க நான் கண்வைத்த இரண்டு புத்தகங்கள் அவை.

முதலில் 'அடுத்த விநாடி' யை சில விநாடிகள் மேலோட்டமாகப் புரட்ட நினைத்த என்னை முழுதுமாக அது ஈர்த்ததில், மற்ற வேலைகளை மறந்து அப்படியே உட்கார்ந்து விட்டேன்,

சுய முன்னேற்ற நூல்கள் பொதுவாக 'எழுதியவருக்கே' அதிகம் உதவுவதாக இதுவரையில் கேள்விப்பட்டுள்ள எனக்கு, இந்நூல் உண்மையில் நல்ல ஆச்சரியமளித்தது.
தொடக்கம் முதலே பிசிறு தட்டாத, ஈர்க்கும் நடை ரூமிக்கே உரிய கலை.

முதல் அத்தியாயத்தில் 'ஒரு ரகசியம்' சொல்லித்தொடங்குகிற இந்நூல் வெற்றிக்குரிய 'பயிற்சியை' மேற்கொள்பவர்களாக வாசகர்களை இறுதியில் ஆக்கிவிடுகிறது
எதிர்மறையான எண்ணங்களையும் உணர்வுகளையும்,பழக்கங்களையும் விடாதவரை வெற்றியும் நமக்கு எதிர்மறையாகவே இருக்கும்.

வெற்றிக்கு மாலையிட விரும்பும் யாரும் தன்னைத்தானே தோற்கடிக்கிற மனப்பாங்கை (Self Defeating Behaviour) விட்டும் கட்டாயம் மீள வேண்டும் என்பதை வலியுறுத்தும் முதல் அத்தியாயத்தில் வருகிற பொன்மொழியிது:"சிந்திப்பவர்கள் சாவதில்லை, சிந்திக்காதவர்கள் ஏற்கனவே செத்துப்போனவர்கள்"

வெற்றி என்பது பணம் புகழ் சம்பாதிப்பதோ, சொத்து சேர்ப்பதோ அல்ல. இவையெல்லாம் வெற்றியைக் குறிக்கலாம்.வெற்றியின் எத்தனையோ அடையாளங்களில் இவை ஒன்று அவ்வளவு தான்.

'தோல்வி, அவமானம், ஏமாற்றம் எனப்பலப் பெயர்களில் வெற்றி தொடக்கத்தில் வருவதுண்டு' என வெற்றியின் பல முகங்களை இரண்டாம் அத்தியாயம் பேசுகிறது.
உதாரணங்களாக, பத்தாயிரம் தடவை தோற்றிருந்தாலும், இன்று ஒரு மாபெரும் வெற்றியாளராக அறியப்படும் விஞ்ஞானி எடிசனும், பலப்பல தோல்விகளுக்குப் பின்னரே வெற்றிக்கொடி கட்டிய ஆபிரஹாம் லிங்கனையும் ஆசிரியர் சுட்டுகிறார்.

நம்பிக்கை என்கிற அற்புத விளக்கைப் பற்றி பேசும் போது, தெளிவில்லாமல் குழப்பமாக இருந்தால் எந்த நம்பிக்கையாலும் பயன் இல்லை, உணர்ச்சியோடும், தெளிவான நம்பிக்கையோடும் ஆழ்மனத்துக்கு அனுப்பப்படும்எண்ணங்கள் மட்டுமே வெற்றியாக நமக்குத் திரும்பி வரும்' என்கிறார்.

ஆசை என்னும் பிரார்த்தனை பற்றி, குறிக்கோளுடன் கூடிய ஆசையை ஆசிரியர் வலியுறுத்துகிறார்.

'எந்த ஒரு காரியத்திலும் வெற்றி பெற வெற்றியின் விதிகளைப் பின்பற்றுவதுடன் தோல்வியின் எந்தவிதியையும் பின்பற்றாதிருக்க வேண்டும் என்பதையும் ஒரு விதியாக உணர்த்துகிறார்.'தோல்வியின் விதிகளில் ஒன்று பதற்றம் (Tension) அடைவது'

நம்முடைய நாம், மற்றவருடைய நாம், உண்மையான நாம் என்று ஒவ்வொருவருள்ளும் இருக்கிற மூவரை வெளிப்படுத்தி அவரவர் வாழ்க்கை அவரவருக்கானதாக, உண்மையானதாக இருக்கவேண்டும் என்பதும் விளக்கப்பட்டிருக்கிறது.

வசதியற்றிருந்தாலும், செல்வமனநிலை கொண்டவர்களே வெற்றிக்குத் தகுதியானவர்கள் என்று விவரிக்கிற இந்நூல் பெரிய காரியங்களுக்கு வித்திடும் சிறிய அம்சங்களையும் நுண்ணோக்கிப்பார்வையில் கண்டு அவற்றின் முக்கியத்துவம் உணர்த்துகிறது.

நல்ல ஞாபகசக்தியின் முக்கியத்துவம் குறித்து கூற வருகிற ஆசிரியர், அதற்காக, தேவையற்ற எண்ணங்களை வைத்துக்கொண்டு குழப்பிக்கொள்ள கூடாது, குப்பைக்கூடையில் எறிந்துவிட வேண்டும் என்கிறார்.

அடுத்தவர் மீது பழி போடுவது, எதையும் நியாயப்படுத்த முயல்வது, கோபம், (பொருந்தாப்)பேச்சு என்கிற சுய சிறைகளிலிருந்து வெற்றிபெற விரும்புபவர்கள் வெளியேற விரும்பினால், இந்நூல் அதற்கு ஐயமின்றி உதவுகிறது.

முடிவெடுப்பதில் மதில்மேல் பூனையாக இருக்கக்கூடாது என்கிற கருத்து 'எண்ணித்துணிக கருமம்..' என்கிற குறளை நினைவுபடுத்துகிறது.

உடல்மொழி குறித்து சொல்லவரும்போது, உடல் என்பது சூட்சுமமான முறையில் மனது தான் என்கிறார்.

இறுதியாக, எளிய பயிற்சிகளாக 1) மூச்சுப்பயிற்சி, 2). கண் பயிற்சி 3). ரிலாக்சேஷன் 4). ஆல்ஃபா பயிற்சி 5) நினைவாற்றல் பயிற்சி 6). நினைத்தது நடக்க பயிற்சி 7). மன ஒருமைப்பாட்டுக்கான பயிற்சி ஆகிய பயிற்சிகளைத் தந்திருப்பதன் மூலம் இந்நூல் மேலும் சிறப்புடையதாகிறது.

முன்னேற்றத்தில் விருப்பமுடைய அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல்.

நாகூர் ரூமியின் சில படங்களை இங்கு காணலாம்:

http://www.box.net/public/2x36rq6zxxRumi's Picture

Thursday, February 08, 2007

கணவன் - மனைவி - ஆடை!

கடந்த வாரம் கணவனா மனைவியா என்ற தலைப்பில் ரியாத்-தில் நடந்த நகைச்சுவையான பட்டிமன்றத்தில் கணவனே என்று பேச "நேர்ந்தது".

'நேர்ந்தது' என்று சொல்லக்காரணம், ஏற்றுக்கொண்ட தலைப்புக்கேற்ப பேசினேன் என்பதைத்தான். இல்லாவிட்டால், எல்லாக் கணவர்களையும் போல நானும் மனைவியே! கட்சி தான் என்பது இங்கு கேடயக்குறிப்பு. (Disclaimer).

பேசி முடித்ததும், நிறையவே பாராட்டுக்கள் கிடைத்தன என்றாலும் ஒரு சகோதரியின் பாராட்டு புன்னகைக்க வைத்தது. "நல்லாயிருந்துச்சுங்க! - இன்னும் கொஞ்சம் சிரிச்சிக்கிட்டே பேசி இருக்கலாம்!"

உண்மையைச்சொன்னால், மேடை அனுபவம் அதிகமில்லாத நிலையில், மேடைக்கூச்சத்தை சரிசெய்துக்கொள்ள கிடைத்த வாய்ப்பை தவறு செய்யாமல் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். நிறைய பேசும் எண்ணமும், குறிப்புகளும் வைத்திருந்தும், பதவிக்காலத்தில் அரசியல்வாதிகள் நினைவுபடுத்திக்கொள்ளும் வாக்குறுதிகளைப் போலாகிவிட்டிருந்தன என் மேடைநேரத்துச் சிந்தனைகள்.

மேடையை விட்டு இறங்கியதும் தான், தேர்வு முடிந்த மாணவனுக்கு ஞாபகம் வருவது போல, வரிசையாக நினைவுகளில் அலைமோதின குறிப்புகள்."அட, அந்த ஒரு சிரிப்பையும் சொல்லியிருக்கலாமே...?"

அன்றைய இரவில் எனக்கு இதே தலைப்பினையொட்டி ஒரு மின்னல் கீற்று ஞாபக அ(இ)டுக்குகளிலிருந்து கண்விழித்தது.

கிட்டத்தட்ட பதினைந்து, பதினாறு ஆண்டுகளேனும் இருக்கலாம், ஆடை என்கிற தலைப்பில் கவிக்கோ அப்துல்ரகுமான் எழுதிய ஒரு ஆன்மீகக் கட்டுரை வாசித்து!

ஜூனியர் விகடனோ, ஜூனியர் போஸ்ட்டோ, நினைவில்லை, ஆறாவது விரல் என்கிற தொடரில் எழுதியிருந்தார். நினைவிலிருக்கும்வரை எழுதுகிறேன், தவறாக ஏதும் இருப்பின், அறிந்தவர்கள் சுட்டினால் திருத்திக்கொள்வேன்.

ஆன்மீகம் என்று வரும்போது, இலக்கியவாதிகளைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்பது என் பொதுவான கொள்கை! காரணம், இலக்கியம் என்பது என்னதான் காலக்கண்ணாடியாக கருதப்பட்டாலும், குவிஆடியாகவோ, குழி ஆடியாகவோ-எதையும் மிகைப்படுத்தவோ, குறைப்படுத்தவோ-செய்கிறது என்பதென் எண்ணம்.

ஆயினும்,யோசித்துப்பார்த்தவரை 'ஆடை' என்கிற கவிக்கோவின் கட்டுரை இயல்பாக இருப்பதாகவே உணர்கிறேன். எனவே, நினைவிலிருந்து இங்கு பதிவிறக்கம் செய்துவைக்கிறேன். ஏதும் தவறாக எழுதி இருப்பதாக அறிந்தவர் சுட்டினால் திருத்திக்கொள்கிறேன்.

குர்ஆனில் கணவன் மனைவி குறித்து சொல்லப்படும் ஒரு உவமைக்கு அப்துல்ரகுமான் அதில் விளக்கமளித்திருந்தார்:

சூரத்துல் பகரா என்கிற அத்தியாயத்தில் 187ம் வசனத்தில் "அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை!" என்று சொல்லப்பட்டுள்ளது! அதாவது, கணவன் மனைவிக்கு ஆடை! மனைவி கணவனுக்கு ஆடை!

மணவாழ்க்கையில் யார் உயர்ந்தவர்கள் என்பதில் கணவன், மனைவி இடையே தான்மை (Ego) விளையும் நிலையில் இவ்வசனம் தீர்வாய் நிற்கிறது.இருவரும் ஒருவருக்கொருவர் ஆடை. எனவே, இப்பதவிகளைப் பொறுத்த அளவில் இருவரும் சமமே!

அதி முக்கியத் தேவைகள் மூன்றில், உணவை, உறைவிடத்தை உவமையாகக் கூறாமல், உடையைச் சொன்னதில் ஆழமான பொருள் இருக்கிறது.ஏனெனில், உயிரினங்களில் மனிதன் மட்டும் தான் ஆடை அணிகிறான். பாலுணர்வையும், அழகாக, திருமணம் என்கிற வரம்புக்குட்பட்டு வெளிப்படுத்துவது மனித இனம் மட்டுமே.அதனால் தான் அவன் 'மண'க்கிறான்.

திருமணம் என்பதை ஆணும் பெண்ணும் 'ஆடை' அணியும் நிகழ்வாகச் சொல்லப்பட்டிருப்பது சிந்தனைக்குரியது!


அவரவர் அணியும் ஆடையை அவரவரே தேர்ந்தெடுக்க வேண்டும். தன் விருப்பம் போல் தேர்ந்தெடுத்ததை உடுத்தும் போது தான் மனமகிழ்வு இருக்கும். திருமண உறவு என்பதும் அப்படித்தான்.விரும்பியதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் விருப்பத்தோடு உடுத்த முடியாது.

அடுத்து, ஆடை நமக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும். இவ்வுலகின் சூழ்நிலைகள், காரணங்களில் ஒவ்வொருவரும் ஆயத்த ஆடைகளே! அதில் அவரவர் தம் விருப்பத்துக்கும், பொருத்தத்துக்கும் ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொள்வதே நலம் பயக்கும்.

ஆடையானது பாலுறுப்புகளை மறைப்பதைப் போல கணவன் என்கிற ஆடை கட்டிக்கொண்டிருக்கும் ஒரு பெண் தவறான பார்வைகளிலிருந்து மறைக்கப்படுகிறாள். மனைவி என்கிற ஆடை அணிந்துக்கொண்டிருக்கும் ஒரு ஆணும், அவ்விதமே மறைக்கப்படுகிறான்,

தட்ப வெப்பங்களிலிருந்து நம்மை ஆடையானது காப்பது போல, இன்ப துன்பம் தாக்காமல், கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு தருகிறார்கள்.

ஆடையானது அழுக்குப்படாமல் உடலைக் காப்பது போல, தீய பழக்கங்கள் என்ற அழுக்குப்படாமல் கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் காத்துக்கொள்ள வேண்டும்.

உடற்குறைகளை வெளித்தெரியாமல் ஆடை மறைப்பது போல், கணவனின் குறைகளை மனைவியும், மனைவியின் குறைகளை கணவனும் மறைக்க வேண்டும்.

சமூகத்தில்,ஆடை என்பது கெளரவத்துக்காக அணியப்படுகிறது, கணவனும், மனைவியும் ஒருவர் மற்றவரின் கெளரவமாய் அமைய வேண்டும்.


அதுபோலவே, ஆடை அடையாளத்துக்காகவும் அணியப்படுகிறது. கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவரின் அடையாளமாய் இருக்க வேண்டும்.


ஆடை அழகுக்காக அணியப்படுகிறது. அதுபோல கணவனும் மனைவியும் அழகுப்படுத்துபவர்களாக இருக்கவேண்டும். சிறந்த அழகு தூய்மை தான்.எனவே, ஒருவருக்கொருவர் ஆடையாக இருவரும் தூய்மையாக இருக்க வேண்டும்.

ஆடை, நாகரீகத்துக்கான குறியீடு. ஆடை இல்லாதவன் அரை மனிதன். திருமணத்தில் தான் ஆணும் பெண்ணும் முழுமையடைகிறார்கள்.

ஆடையில் ஒரு சமூகத்தின் பண்பாடு வெளிப்படும். கணவன் மனைவி என்கிற ஆடையிலும்!

ஆடை அழுக்காகி விட்டால், தூக்கி எறிந்துவிடக்கூடாது. சலவை செய்து அணிந்துக்கொள்கிறோம்.சற்றே கிழிந்து விட்டாலும், தைத்து அணிந்துக்கொள்கிறோம். கணவனிடமோ, மனைவியிடமோ, குறைகள், கோபதாபங்கள் ஏற்பட்டால், பிரிந்து விடக்கூடாது. சமாதானமாகி விட வேண்டும்.

ஆயின், அணியவே முடியாத அளவுக்கு அழுக்கடைந்தாலோ, தைக்கவே இயலாத அளவுக்கு கிழிந்துப் போனாலோ, ஆடை என்பது அதன் பொருளை இழந்து விடும் நிலையில் தூக்கி எறிந்து விட்டு புதிய ஆடையைத் தைத்துக்கொள்ள வேண்டியது தான்.

'அறிவு'க்கனி உண்டவுடன் ஆதாமும் ஏவாளும் செய்த முதல் வேலை ஆடை அணிந்ததாகத்தான் இருக்கும். அறிவிழந்து பைத்தியம் முற்றியவர் செய்யும் முதல் வேலையோ 'ஆடை'யைக் கிழிப்பது தான். காரணமின்றி, தத்தம் "ஆடை"யை கிழிக்கிற கணவனோ, மனைவியோ பைத்தியக்காரர்கள் தான்!

(கவிக்கோவின் குர்ஆன் சார்ந்த சிந்தனைகளை, நினைவிலிருந்தவரை என் எழுத்துக்களில் தந்திருக்கிறேன். தவறுகள் காணுமிடத்து, தயங்காமல் சுட்டும் படி மறுபடி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி).

Labels: , ,

Tuesday, July 11, 2006

மரணம் - சில எண்ணங்கள்.

'எனக்குத் தெரிந்த வாழ்க்கையை விட நீ நல்லவள். வாழ்க்கை பலரை வெறுக்கிறது. சண்டை போடுகிறது. நீயோ எல்லோரையும் அரவணைத்துக்கொள்கிறாய்.' என்று ஒரு கவிஞன் (முகத்திரை அணிந்த)மரணத்தைப் பற்றி எழுதியிருந்தான். எல்லோரையும் பாரபட்சமின்றி ஏற்றுக்கொண்டாலும், மனிதர்கள் மரணத்தை விரும்புவதாயில்லை. பின்னங்கால் பிடறியில் பட மரணத்திலிருந்து தப்ப முடிகிற வழிகளைத் தேடி மனிதர்கள் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள் வாழ்நாள் முழுதும். துருப்புச்சீட்டாக சக மனிதர்களைத் தரவும் அவர்கள் தயங்குவதில்லை.

அடிப்படை ஆதாரமற்ற ஒருசெவிவழித் தொன்மம் நினைவுக்கு வருகிறது.

சாலமன் மன்னரின் அவைக்கு மரணத்தேவன் ஒருமுறை 'மரியாதை வருகை' செய்தபோது அந்த அவையில் அமர்ந்திருந்த ஆள் ஒருவருக்கு வியர்த்துப்போனதாம். மரணத்தேவன் அங்கிருந்துப்போனதும் அவர் சாலமன் மன்னரை நோக்கி, "காற்றுக்கும் கட்டளையிடும் உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி என்னைக் கண்காணாத ஒரு கோட்டைக்கு அனுப்பி விடுங்களேன், மரணத்தேவன் என்னை முறைத்த பார்வை இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது" என்றாராம். அதன்படி அனுப்பி வைக்கப்பட்டாராம்.
பிறிதொரு முறை வருகை தந்த மரணதேவன் சாலமன் மன்னருக்கு 'நன்றி' சொல்ல, சாலமன் கேட்டாராம் "எதற்கு?". " அந்த ஆளை 'உரிய இடத்துக்கு' அனுப்பி வைத்ததற்காக" என்றாராம் மரணத்தேவன்.

இன்னொரு சம்பவமாக, சமீப ஆழிப்பேரலையில் மறைந்துவிட்ட ஒரு தூ..ரத்து உறவினர். பல கல் தொலைவுக்கு அப்பாலுள்ள ஒரு நகரில் ஆடையகம் நடத்தி வந்தார் அவர். எல்லா ஞாயிறுகளிலும் ஊருக்கு வந்துவிடுவார். அந்த கறுப்பு ஞாயிறன்று ஒரு டென்னிஸ் விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு அந்நகரிலேயே அவர் தங்கிவிட நேர்ந்தது.
விளையாடும் களத்தில் வந்த நீரலையை வேடிக்கை என்று நினைத்து.. விபரீதம் உணரும் முன் மரணப்பாலத்தை அவர் கடக்கநேர்ந்ததை இன்றும் நம்ப முடியவில்லை. இத்தனைக்கும் வெறும் மூன்று கல் தொலைவிலிருக்கும் சொந்த ஊரில் வெறுங்கையோடு கடல் திரும்பிப்போக, 90 கல் தொலைவு சென்றவர் மட்டும் சென்றவராகி விட்டார். அங்கும் கடல் இருந்தது. மரணமும்.

இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்: "தலைவிதி, இங்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கு"

வியாதியென்றோ, விபத்தென்றோ, பேராசையென்றோ, போரோசையென்றொ எந்த ஒரு காரணமுமின்றி மரணம் யார்வீட்டுக்கதவையும் தட்டுவதில்லை.

சில மரணங்கள் மா-ரணங்கள்.காலத்தின் அழியாவடுக்கள்.கும்பகோணத்தில் குழந்தையில் கருகிய நம்பிக்கைகளில் பட்ட ம(ன)ரணங்களிலிருந்து பதினெட்டு வருஷம் வெளிநாட்டு வாழ்க்கை போதும் என்று சிங்கப்பூரிலிருந்து வந்து சேர்ந்த அடுத்தநாளே மரணித்த தூரத்து உறவு மாமா வரை.

'எறும்புகள் நசுக்கப்படுவதற்கு என்ன காரணமிருக்க முடியும் - அது எளிது என்பதைத் தவிர' என்று படித்த ஒரு வரி இன்னமும் மனதில் ஊர்ந்துக்கொண்டிருக்கிறது - தினம் தினம் காரணமின்றிக் கொல்லப்படுகிறவர்களை கேட்கவோ, காணவோ நேரிடும்போதெல்லாம்.

அழுகையுடனே அடையாளப்படும் மரணம் சிரிக்கவும் வைப்பதுண்டு. கொடுங்கோலர்களை அது தழுவும்போது குடியானவர்கள் சிரித்து மகிழுகிறார்கள். பாலகர்களை அது உட்கொள்ளும் போதோ, கொடுங்கோலர்களும் துடித்து விடுகிறார்கள். அல்லது கொடூரத்தையே தமது துடிப்பாக்கிக்கொள்கிறார்கள்.

மரணத்துடன் ஆடும் கண்ணாமூச்சியே வாழ்க்கை என்றாலும் இந்த ஆட்டத்தில் வெல்வது தனிவகை.
அது மாட்டிக்கொள்ளாமல் நாள் கடத்துவதிலில்லை. உண்மையைச் சொன்னால், ஈட்டுகிற பெயர் எதுவும், இற்றுப்போகும் உடம்போடு பெயர்ந்துவிடாமல் காலத்தின் சுவரில் கலைச்சித்திரமாகச் செதுக்கி வைக்கிற கைத்திறமையில் தான் அது இருக்கிறது.

காலமெல்லாம் களைப்பின்றி போராடுபவன் செத்தபின் காட்டுகிறான் வெள்ளைக்கொடி.

ஆசாபாசங்கள் தீர்ந்துப்போன அந்த குடுவையை எரிப்பதும் புதைப்பதும் மனித மனத்தின் துருவ முரண்கள்.

தூரத்து நாட்டில் கொடூரமாகக் கொல்லப்பட்ட குழந்தையை விடவும், பக்கத்து வீட்டில் இழுத்துப் பறித்துப் போய்ச்சேர்ந்த முதியவனே அதிக துக்கம் அளிக்கிறான். இத்தகைய 'சார்பு' இருப்பதால் தான் மரணத்தோடு சார்ந்திருக்கின்றன துக்கமும் துயரமும்.

மரணம் தொட்ட இடத்திலிருந்து துயரத்தின் குருதி பெருகுவதன் காரணம் பற்று தான்.
உலகத்திலும், உறவிலும், உடமையிலும் நாம் வைக்கும் பற்று. பற்றினால் விளையும் இப்பக்கவிளைவை எதிர்கொள்ள வரவு வைப்பதே வழி.நற்செயல்களால் நமது 'புத்தகத்தில்' வரவு வைக்க வேண்டும். குறைந்தபட்சம் 'நல்லெண்ணங்களாலாவது'.

அழையா விருந்தாளியாய் உள் நுழைய வாசலிலேலேயே காத்துக்கிடக்கும் மரணம் விஞ்ஞானிக்கு இன்னமும் விந்தை. ஆன்மீகவாதிக்கு அதுவே ஒரு 'பாலம்' தான். கவிஞனுக்கு அது 'கரு'ப்பொருள்.


பயங்கரவாத வெறியாட்டம்
பலியாயினர் அப்பாவிகள்

இலங்கையில் குண்டுவெடித்து
இருநூறு பேர் சாவு

இஸ்ரேல் ஏவுகணை வீச்சு
இழப்பு சில உயிர்கள்

இராக் குழந்தைகள்
ஏராளம் மரித்தன
உணவின்றி

எல்லாமே செய்தியென்று
இருந்துவிட்டுப்போக...

பக்கத்துவீட்டில்
திடீரெனச் செத்தவனோ
பாதி ராத்திரியில்
எழுந்து வருகிறான்
என் தூக்கம் கலைப்பதற்கென்றே!

-------------------------------

முற்றுப்புள்ளிகளை கொஞ்சுபவர்களே!
சற்றேனும் கற்றுணருங்கள்:
வாக்கியத்தின் இனிமை
முற்றுப்புள்ளியில் இல்லை.

நீளமான வாக்கியத்தை
நினைத்தேங்குபவர்களே!
சிறிய வாக்கியமும்
சிறப்புப் பெறுவதுண்டு
குறளைப் போல

எல்லா வாக்கியங்களுக்கும்
இருக்கிறது ஒரு முற்றுப்புள்ளி
என்று சொல்பவர்களே
இருங்கள்,
இடைநிறுத்தக் குறி
ஒருபோதும் முற்றுப்புள்ளியாவதில்லை.


(தேன்கூடு ஜூலை மாதப்போட்டிக்கென இது என் முதல் ஆக்கம்)

Sunday, July 09, 2006

முட்களும் பூக்களும்!

முட்களும் பூக்களும்!


முத்தங்கள் வழியும் பால்யம்
முடிவுக்கு வர
நிராகரிப்பின் முட்களோடு
நீளும் உனது கரம்
வருத்தங் கசிய வைப்பதில்லை
ஒருபோதும்!
உனது மவுனம்
உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறது
சங்கடம் என்றொரு அர்த்தமும்
சம்மதம் தனக்கென்று!

நடக்கப் பழகிவிட்டப் பின்னர்
நான் அறிந்தே வைத்திருக்கிறேன்
நாளை
என் பருவத்தின் பாதையில்
மறுபடி துளிர்க்கும்
உனது கரத்தில்
இருக்கலாம்
எனக்கான பூங்கொத்துகள்!