Saturday, February 12, 2005

பொய் மான் பொழுதுகள்

ஓர் இதிகாசச்செருப்பு
சிம்மாசனமேறிய போது..
உடையவனுக்கு இருந்ததோ
ஒற்றை முகம் தான்..!

இன்றைக்கும்..
பதவி ஆசை காட்டியே
பயன்படுத்தப்படுகின்றன செருப்புகள்!
உபயோகிப்பவர்களை
உற்றுநோக்கினாலோ....
பத்து முகங்கள்..

‘வில்’லுடன் இருந்தான்
கதாநாயகன் அன்று!
வில்லன்களாகவே இருக்கிறார்கள்
இன்றைய கதாநாயகர்கள்.

வாக்குறுதியை
உயிரினும் காத்ததனால்
வனவாசம் நிகழ்ந்ததென்ற
இதிகாச உண்மைக்கு
இன்றைக்கும் பயந்து….
காட்சி முடிந்ததும்
கலைத்துவிடும் எண்ணத்தில்
‘ஒப்பனை’ யாகவே உள்ளன
இன்றைய வாக்குறுதிகள்!

கவர்ச்சியில் மயங்கி….
‘பொய்மானை’ த்
துரத்திக்கொண்டிருக்கிறார்கள்...
பொதுமக்கள்
பொழுதெல்லாம்...!
-----------------------------------------------

No comments: