Showing posts with label குற்றாலம். Show all posts
Showing posts with label குற்றாலம். Show all posts

Sunday, August 08, 2010

இது குற்றாலம் கொட்டும் காலம்



(இரண்டரை ஆண்டுகளுக்கு முன் அன்புடன் மடலாற்குழுமத்தில் "இது குற்றாலம் கொட்டும் காலம்" என்ற தலைப்பில் நிகழ்வுற்ற கவியரங்கில் பாடியதிக் கவிதை. (மரபுப்பாக்கள் முயன்று கற்ற நேரம் அது)



இறைவாழ்த்து*
உற்சாகம் பொங்கிவர உள்ளத்தில் நீரருவி
சொற்களும் தித்திக்கும் செந்தமிழ் - நற்கருணை
வல்லோனே நீயளிக்கும் வாய்ப்பிதுவே என்கவிதைச்
சொல்லால் அருவிகள் செய்.


*தமிழ்வாழ்த்து
*பேச்சாய் எழுத்துமாய் பேருலகில் வாசம்நீ
மூச்சாய் எமக்கும் முகிழ்த்தாய்நின் - வீச்சினில்
பாயும் வெளிச்சத்தின் பாதையில் சென்றாலே
ஆயும் கவியாவேன் ஆம்


*தலைவர் வாழ்த்து*
அன்புடன் வந்திங்கே ஆற்றலைக் காட்டுகிற
நண்பரவர் சக்தியெனும் நற்பெயர் - பண்பில்
நிறைந்த கவிஞர் நலமுடன் வாழ்த்தி
உரைகள் சொன்னார் உயர்வு!


*அவை வாழ்த்து*
எங்கவிதை நீரருவி என்னும் கவிஞரும்
தங்கவிதை பாடும் தலைவரும் - பொங்கிடும்
நற்கவிதை இன்பத்தை நாடிவந்த வாசகரும்
குற்றாலம் என்பராம் குளித்து!


*முதன்மைக் கவிதை*
குற்றாலம் என்பதெல்லாம்
குளிக்கின்ற நீரருவி
சற்றேயோர் ஆனந்தம்
சாகசத்தின் ஓர்முழக்கம்.!


மற்றுமிது மடைதிறப்பு
மறக்காத வெண்சிரிப்பு
வற்றாத உயிரினொளி
வானுயரும் உள்ளொலிதான்..


குற்றாலம் எங்குண்டு
கவிஞனிடம் கேட்டாலே
சொற்களிலே வடித்திடுவான்
சுவையான கவியருவி.


பிற்கால உலகத்தில்
பிள்ளைகளின் நல்வாழ்வு
பொற்காலம் ஆவதற்கே
பெற்றோரின் கனவிலுண்டு.


உற்றோனில் உயர்ந்தோனாய்
உதவுகின்ற உள்ளத்தில்
மற்றோரும் மணங்கமழ
மகிழ்கின்ற மனதிலுண்டு..


கறுத்திருக்கும் அரசியலை
கவனிக்கும் பேராளர்
கருத்துடனே பொழிகின்ற
கார்மேகப் பெருமழையாம்..


அறுத்திருக்கும் இதயங்கள்
அன்பாலே ஒட்டவைக்க
அருந்தவத்தார் செய்கின்ற
அழகான பெருமுயற்சி..


பெருத்துவரும் ஊழலின்கண்
புழுத்துவரும் கையூட்டைப்
பொறுத்திருந்துப் பார்த்துவிட்ட
பொதுமக்கள் பேரெழுச்சி.!


சரித்திரத்தின் பூக்களிலே
சுவைத்தேனை உண்டுவரும்
சிரித்திருக்கும் காதலர்க்கு
சுகமான கண்காட்சி..


தரிசான உள்ளத்தும்
தன்வரிகள் எழுதிவிடும்
தாளம்போல் பேரிரைச்சல்
தண்ணீரே பாட்டாகும்.


பரிசாகும் புத்துணர்வே
பாவடிக்க மனமூறும்
பன்னீரும் நன்னீரும்
பூத்துவரும் பொதுவாக.!


அரசாட்சி இறைவனுக்கே
அறிவிக்கும் ஓர்சாட்சி
ஆன்மத்தின் கண்கொண்டால்
அனைத்துமே அருங்காட்சி.


முரசொலித்து முடிக்கின்றேன்
முதலோனின் புகழோதும்
நற்சாட்சி ஈதொன்று
நானிலத்தில் பலவுண்டே..!