Wednesday, August 24, 2011

பொறாமைத் தீயில் பொசுங்கும் நல்லறங்கள்

 

வழக்குத் தமிழில், “பொறாமை” என்றும் இலக்கியமாய் “அழுக்காறு” என்றும் கூறப்படும் கெட்ட எண்ணத்திற்கு அரபுமொழியில் “ஹஸது” (Jealousy and Envy) என்று சொல்வார்கள்.
சகமனிதருக்குக் கிடைத்திருக்கும் வசதி வாய்ப்புகள், திறமை ஆகியவற்றின்மீது ஆசை கொண்டு சகமனிதருடைய வீழ்ச்சியை விரும்புதல்; அவ்வீழ்ச்சியில் மகிழ்ந்திருத்தல், அதற்கான செயல்களில் ஈடுபடல் போன்ற இழிவான மனப்பான்மைக்குத்தான் பொறாமை என்று சொல்லப்படும்.
இதில் நேரடிப் பொறாமை, மறைமுகப் பொறாமை என்று இரு வகைகள் உண்டு. நேரடிப் பொறாமையாளர்கள் வெளிப்படையாக ஒருவனை வீழ்த்தும் எண்ணத்தை/பேச்சை/செயலை மேற்கொள்கிறார்கள் என்றால் மறைமுகப் பொறாமையாளர்களோ உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி, நயவஞ்சகராகவும் (முனாஃபிக்) செயற்படுகிறார்கள்.
இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் இந்தப் பொறாமைநோய் குறித்துக் கடும் எச்சரிக்கையை நமக்கு அளித்துள்ளார்கள்.
விறகை நெருப்புத் தின்று விடுவதைப்போலப் பொறாமை உங்களின் நற்செயல்களை அழித்துவிடுகிறது, எனவே எச்சரிக்கையாக இருங்கள்என்கிற நபிமொழி (நூல்: அபூதாவூத்) பொறாமையின் பொல்லாத் தீங்கை உணர்(ந்)/த்/திடப் போதுமானதாகும்.
மற்றவருக்குக் கிடைத்திருக்கும் கல்வி(அறிவு), செல்வம், மக்கட்பேறு, பதவி, சமூகநிலை, வலிமை, திறமை போன்ற உலகியல் ஆபரணங்களில் ஒருவன் பொறாமை அடையும்போது அவன் அறிந்தோ, அறியாமலோ, அவை, அந்த மற்றவருக்கு, தம் இறைவனாலேயே வழங்கப்பட்டன என்பதை மறந்து, அல்லது மறுத்து விடுவதாகவே பொறாமை அமைகின்றது.
தன்னைவிட மற்றோரை மேன்மையாகக் காணும்போது, இறைவன் தனக்கு நீதி செய்யவில்லை என்பதுபோலக் கருதி, மனிதன் பொறாமைச் சேற்றில் வீழ்கிறான். அதுமட்டுமா? இறைவன் தனக்கு வழங்கியுள்ள நற்பேறுகளையும் பாக்கியங்களையும்கூட, அவன் மறக்கவும் துறக்கவும் தலைப்படுகிறான். “எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை…..” என்கிற மனநிலை.
ஒருமுறை இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களிடத்தில், “அவர்கள் இறை அருளுக்கு விரோதிகள்என்று மொழிந்தார்கள். தோழர்கள், “யாரைச் சொல்கிறீர்கள் நபியே?” என்று கேட்க, நபி(ஸல்)அவர்கள், “இறைவன் தனக்கு(ம்) வழங்கியிருக்க, மற்றவரைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்களே, அவர்கள்தாம்என்று கூறினார்கள் (நூல்: அத்-தப்ரானி).
யாருக்கு எங்கே, எவற்றை, எவ்வளவு, எவ்விதம் வழங்குவது என்பதை இறைவனே தன் தூய அறிவால் தீர்மானிக்கிறான். இந்தப் பேருண்மையை அறியாமல், பொறாமை கொள்பவன், தன் இறைவனை அறியாதவனாகிறான்.
நிறைவடையா மனநிலை மனிதனைப் பொறாமையில் தள்ளுகிறது. பொறாமை பழிபாவத்திற்கும்,  வன்மம், பொல்லாங்கு இறைமறுப்பு ஆகியவற்றுக்கும் இட்டுச் செல்கிறது. முதல் பாவமாகக் கூறப்படுவதும் பொறாமைதான். ஆதம்(அலை) என்கிற மனிதப் படைப்பைப் பார்த்து  ஷைத்தான் கொண்ட பொறாமை!
இன்று நம்மிடையே தனியாளாயினும், இயக்கங்களாயினும், ஏன் தேசங்களாயினுங்கூட இந்தப் பொறாமைதானே, வம்பு வழக்குகளுக்குக் காரணமாக அமைகிறது! சக மனிதர்கள்/இயக்கங்கள்/அமைப்புகள் செய்த நற்செயல்களை எளிதாகப் புறக்கணிக்கிறோம். அவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த, தீய செயல்களை அம்பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் அவமானப்படுத்துகிறோம்.
இறைநம்பிக்கையுள்ள ஒருவன், தன் நம்பிக்கையாலும் முயற்சிகளாலும் மன நிறைவுடன், மனந்தளராமல், நிலைகுலையாமல் (தானறியாத, தனக்குக் கிடைக்கவிருக்கும் நலவளங்களுக்காகப்) பாடுபட வேண்டுமேயல்லாது மற்றவர்மீது பொறாமை கொள்ளலாகாது. இறைவன் தனக்கு அளித்தவற்றில், மனநிறைவு அடைபவனாக, ஒரு நம்பிக்கையாளன் இருப்பான். இதையே அறிஞர் இப்னு கைய்யூம் இப்படிக் குறிப்பிடுகிறார்: “(மனநிறைவு) அது நிம்மதியின் வாசலைத் திறக்கிறது. அடியானுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கிறது”.
மேலும், அல்லாஹ் உங்களில் சிலருக்கு வேறு சிலரைவிட, வாழ்க்கை வசதியில் மேன்மை அளித்துள்ளான் ...” (16:71) என்பது இறைமறை குர்ஆன் காட்டும் உண்மை.
அதுமட்டுமின்றி இறைமறை, வேறொரு வசனத்தில், “... உலகவாழ்வில் இவர்களுக்குத் தேவையான வாழ்க்கை வசதிகளை நாம்தானே இவர்களுக்கிடையில் பகிர்ந்தளிக்கிறோம். மேலும், நாம் இவர்களில் சிலருக்கு, வேறு சிலரைவிட, உயர்பதவிகளை அளித்தோம்; இவர்களில், சிலர், வேறு சிலருடைய ஊழியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக! ...”(43:32) என்றும் குறிப்பிடுகிறது.
“இவ்வுலக நலவளங்களைக் காட்டிலும் இறையருளே உயர்மதிப்புடையது” என்பதே இதிலிருந்து நாம் உணரவேண்டுவது. ஏனெனில், உயர்வு என்பது உலக ஆபரணங்களில் அல்ல; மாறாக நேர்மையான இறையச்ச உணர்(தக்வா)வில்தான் இருக்கிறது.]
... உங்களில், இறைவனின் கண்ணியத்துக்கு உரித்தானவர், இறையச்சமுடையவரே ... என்கிறது இறைமறை (49:13).
மேலும்... மறுமையோ, இறைவனை அஞ்சி வாழ்பவர்களுக்கு உரித்தானதாகும்” (43:35) என்றும் கூறுகிறது.
இறைநம்பிக்கையாளனின் இருபெரும் வலிமையாக, இறைமீதான அவனது ஆதரவும் அச்சமும் அமைகின்றன.
மற்றவர் அழிந்துபோக எண்ணும் தீய பொறாமைக்குத் தடை சொல்லும் இஸ்லாம், ஒருவருக்கொருவர் நற்செயல்களில் போட்டியிடுவதை நன்கு ஊக்குவிக்கிறது; உற்சாகப்படுத்துகிறது.
தான-தர்மங்களில் தலைசிறந்து விளங்கும் ஒருவரைப் பார்த்து “இறைவா! எனக்கும் நீ செல்வ வளங்களை; ஆரோக்கியத்தை வழங்கினால், இன்னாரைப் போன்றே நானும் தர்மம் செய்வேன்; வாரி வழங்குவேன், நற்காரியங்கள் புரிவேன்” என்று பிரார்த்திக்கத் தடையேதுமில்லை.
இந்த, தீய எண்ணமில்லாத போட்டி மனப்பான்மைக்கு அரபுமொழியில் ‘Ghibtah’ ‘கிப்தாஹ்’ (ஆக்கப்பூர்வமான போட்டியுணர்வு) என்று சொல்லப்படுகிறது.
சுருங்கக் கூறின்,

  • ஹஸது எனப்படும் (தீய எண்ணப் பொறாமை) நற்செயல்களை அழித்துவிடும்.
  • பொறாமை நயவஞ்சகத்துக்கும் இறைமறுப்புக்கும் வழிகோலுகிறது.
  • இறையை நம்பிடும் மனநிறைவு நிம்மதியும் பாதுகாப்பும் அளிக்கவல்லது.
  • ஏற்றம்-தாழ்வு, இரண்டுமே இறைநியதி.
  • தளராமல் பாடுபடுவது நம்பிக்கையாளரின் பண்பு.
  • உலக வளங்களை வைத்தல்ல, உள்ளத்தூய்மை, இறையச்சத்தைப் பொருத்தே இறைவனிடம் நற்சிறப்பும் கண்ணியமும் கிடைக்கும்
  • மறுமை இறையச்சமுடையவர்களுக்கே உரியது.
  • தீய எண்ணமில்லாத, போட்டி மனப்பான்மை (Ghibtah) தவறன்று.
  • பொறாமைக்காரர்களின் தீமையிலிருந்து, இறைவா! உன்னிடம்பாதுகாவல் தேடுகின்றேன்....என்று பிரார்த்திப்போமாக! 
ஆக்கம்: இப்னு ஹம்துன்

சத்தியமார்க்கம்.காம் தளத்திலிருந்து..
Comments:

Sunday, February 13, 2011

ஒரு தாமரைக்கு எத்தனை சுழியம்?

ஒரு தாமரைக்கு எத்தனை சுழியம்?

எனக்கு வந்த ஒரு மடல் கீழே சாய்வெழுத்துகளில் :

அமெரிக்க முறைப்படி எண்களை மில்லியன், பில்லியன், ட்ரில்லியன்,
க்வாட்ரில்லியன், குயின்டில்லியன், என்று துவங்கி சென்டில்லியன் வரை
நீட்டிக்கொண்டே போகலாம். (சென்டில்லியன் என்றால் ஒன்று போட்டு 303
ஸைஃபர் போடவேண்டும்).

ஆனால், நம் இந்தியாவிலோ கோடியைத் தாண்டிவிட்டால் பிறகு வேறு வார்த்தை
கிடையாது. அதன் பிறகு நூறு கோடி, ஆயிரம் கோடி, லட்சம் கோடி, கோடி கோடி
என்று கூறித்தான் மக்களைக் குழப்ப வேண்டி யிருக்கிறது. ஒரு காலத்தில்
கோடி என்பது மிகப் பெரிய எண்ணாக இருந்ததால், அதற்கு மேல் வார்த்தை
தேவைப்படவில்லை. ஆனால், இப்போதெல்லாம் ஒரு ஊழல் மட்டுமே ஒரு லட்சத்து 76
ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடத்தப்படுகிறது.

வருகிற காலத்தில் கோடி கோடி ஊழல் எல்லாம் வரக்கூடும். எனவே, கோடிக்கு
மேல் புதிய சொற்களை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு
ஏற்பட்டுள்ளது.

இதை வைத்து நம் இன்டெர்நெட் அரசியல் ஆர்வலர்கள் விளையாட ஆரம்பித்து
விட்டார்கள். எப்படி ?

1000 கோடி = 1 ராடியா
10,000 கோடி = 1 கல்மாடி
1,00,000 கோடி = 1 ராசா

ஆக, இனிமேல் பெரிய தொகைகளைக் குறிக்கும் தகவல்களைக் கீழ்க் கண்டவாறு
குறிப்பிடலாம்:

அனில் அம்பானி புதிதாகக் கட்டியிருக்கும் வீட்டின் மதிப்பு சுமார்
4.5 ராடியா ரூபாய் (4,500 கோடி ரூபாய்) மதிப்பிருக்கும்.

ஆண்டுதோறும் கெரஸினுக்கு மத்திய அரசு வழங்கும் மான்யம்
2 கல்மாடி ரூபாய் ஆகும் (20,000 கோடி ரூபாய்)

ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் தொகை
50 ராசா ரூபாய் (50 லட்சம் கோடி ரூபாய்) இருக்கக் கூடுமெனத் தெரிகிறது.

-இந்த ஐடியாவை மத்திய அரசு பரிசீலிக்கலாம்.
------------------------------
----------------------------------------
நன்றி : துக்ளக் வார இதழ் 16.02.2011
----------------------------------------------------------------------



நகைச்சு வைப்பதற்காக மேலுள்ளதைக் குறிப்பிட்டாலும்,

உண்மையில் கோடிக்கு அப்பாலும் எண்களைச் சொல்வதற்கு தமிழில் முடியும் என்று தொல்காப்பியம் சுட்டுகிறது:

ஒன்று = 1
பத்து = 10
நூறு = 102
ஆயிரம் = 103
பத்தாயிரம் = 104
நூறாயிரம் = 105
பத்து நூறாயிரம் = 106
கோடி = 107
தாமரை (=கோடிகோடி) = 1014
வெள்ளம் (=கோடிதாமரை) = 1021
ஆம்பல் (=கோடிவெள்ளம்) = 1028

இன்று படித்த ஒரு செய்தி இங்கே கூறத்தக்கது:

1.76 லட்சம் கோடிக்கு எத்தனை "ஜீரோ'? பதிலளித்த மாணவிக்கு ரூ. 10 ஆயிரம்.

Tuesday, January 25, 2011

எடுத்ததும் கொடுப்பதும்: முன் தோன்றி மூத்த குடி


முன்குறிப்பு: வான(ப்பயண)த்தில் பறந்துகொண்டிருந்தபோது, நண்பர் வினவினார் இப்படி: “எத்தனையோ நல்ல புத்தகங்கள்; கருத்துகளைப் படிக்கிறோம், கிரகிக்கிறோம், குறிப்புகளையும் எடுத்துவைக்கிறோம். இருந்தும் நீண்ட காலத்துக்கு அவை நினைவில் தங்குவதில்லையே, என்ன செய்வது?”

இந்த நண்பர் வெளிப்படுத்திவிட்டாலும், இன்னும் நிறையபேருக்கு இந்த வினா ‘உள்’ளே இருக்கத்தான் செய்கிறது.

என்ன சொல்வது? சற்றே யோசித்தேன்.

பள்ளிப் பருவ நுட்பம் ஒன்று நினைவிலாட……

“நாம் படித்ததை; அறிந்ததை; குறித்துக்கொண்டதை, நமது மொழியில்; நமது சொற்களில் நாமாக எழுதிப் பார்க்க வேண்டும், மறக்காமலிருக்க அது உதவும்” என்றேன்.

அதன்படி, அண்மையில் (விடுமுறையில்) நான் படித்த, பிடித்த கட்டுரை ஒன்றை நினைவுப் பேழையிலிருந்து எடுத்து இங்கே என்மொழியில்; சொற்களில் தருகிறேன்.
‘முன் தோன்றி குடி” என்ற தலைப்பில் அப்துல்ரகுமான் எழுதிய கட்டுரை அது.


தமிழினமும் தமிழ்மொழியும் தொன்மை வாய்ந்தவை என்பது வியப்பிற்கும் பெருமைக்கும் உரியது. தமிழ் ஆதிமொழி.

தமிழின் தொன்மையை கூற வேண்டி வந்தால் கண்ணை மூடிக்கொண்டு ஒரு பழம்பாடல் வரியை அனைவரும் ஒப்பிப்போம். அது: ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி” என்கிற வரி.

இந்த வரியை அறியாத தமிழர்களே இல்லை என்னுமளவுக்கு இந்தச் சொற்றொடர் அழியாப் புகழ் பெற்றது. இதன் புகழ் எந்த அளவுக்கு என்று கேட்டால், இதை எழுதியவர் பெயரோ, இந்தப் பாடலின் மற்ற வரிகளோ பலருக்கும் தெரியாது. அவையெல்லாமும் மங்கிப்போகிற அளவுக்கு இந்த வரி பிரகாசமடைந்துள்ளது.

ஆயினும், இதே பாடல்வரியை வைத்துக்கொண்டு, தமிழை, தமிழர்களை கேலி செய்பவர்களும் உள்ளனர். அவர்களும் தமிழர்களே என்பதுவும் அறிந்து வருந்தத்தக்கது.

“அதெப்படி, கல் தோன்றி ( பின்) மண் தோன்றாக் காலத்து” என்று வருவது சரியாக இருக்கும்?” என்பது அவர்களின் கேலி வினாக்களுள் ஒன்று. ”கல் தோன்றியா பின்பா மண் தோன்றும்?”

அது மட்டுமல்லாமல், வாளோடு முன் தோன்றி மூத்த குடி” என்பது எப்படி சரியாக இருக்கும்? என்பதும் அவர்களின் வினா.

ஒருவேளை, ‘வாலோடு முன் தோன்றி மூத்த குடி’ என்பதாக இருக்குமோ என்று கூறி நகைக்கவும் செய்கின்றனர். உண்மையில் அவர்கள்தாம் நகைப்புக்குரியவர்கள். தன் இனவரலாறு அறிந்திராத அவர்கள் நகைப்புக்குரியவர்தாமே.

இந்தப் பாடல் புறப்பொருள் வெண்பா மாலை என்ற நூலில் காணப்படுகிறது. இதை எழுதியவர் ஐயனாரிதனார் என்பார்.

மனித இன வரலாற்றில், தொடக்கக் காலத்தில் மனிதன் மலையில் தான் வசித்துவந்தான். மலையில்தான் இயற்கை உணவுகளான காய்கனிகள் கிடைத்தன. உறைவிடமாகக் கொள்ள இயற்கையான குகைகளும் வாய்த்தன. தமிழ் அகப்பொருள் திணைகளுள் முதலாவதான ‘குறிஞ்சி’ மலையும் மலைசார்ந்த இடமும் பற்றியதே, தமிழில் ‘கல்’ என்ற சொல் மலையையும் குறிக்கும்.

‘கல் இயங்கு கருங் குற மங்கையர்’ என்று கம்பர் சொல்வதில் வருகிற ‘கல்’லுக்கு, மலை என்றுதான் பொருள். (மலையில் வாழ்கிற கருநிற குறத்தியர்).

ஆக, ‘கல்’ தோன்றி என்பதற்கு ‘மலை தோன்றி’ என்று பொருள். அதாவது மலைவாழ் காலமாகிய ‘குறிஞ்சி வாழ்க்கை தோன்றி’ என்று பொருள்.

ஆதியில் மலையில் வசித்துவந்த மனிதன், பின்னர் ஆடுமாடுகள் உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகளைப் பழக்கி அவற்றை ஓட்டியபடி காட்டுக்கு வந்தான். தமிழ் அகப்பொருள் இலக்கணம், காடும், காடுசார்ந்த இடத்தையும் முல்லை என்று சொல்கிறது.

சரி, “மண் தோன்றாக் காலத்து” என்றால்?
மண் என்பது சிறப்புப் பொருளில் நிலத்தைக் குறிக்கும். குறிப்பாக, விவசாய நிலத்தையே அப்படிக் குறிப்பிடுவர். (“இந்த மண்ணுக்கு என்னமா விளைஞ்சிருக்கு, பாருங்களேன்). ஆக, மண் தோன்றாக் காலம் என்றால், வயல் தோன்றாத காலம், அதாவது, மனிதன் விவசாயத்தை அறியாத காலம் என்று பொருள்படும். வயலும் வயல் சார்ந்த இடத்தை தமிழின் அகப்பொருள் இலக்கணம் ‘மருதம்’ என்றழைக்கிறது.

மலை வாழ்க்கையாகிய ‘குறிஞ்சி’ தோன்றி, வயல் வாழ்க்கையாகிய ‘மருதம்’ தோன்றுமுன்பே ‘முல்லை’யாகப் பூத்தது தமிழினம் என்பதே ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து…’ என்பதற்குப் பொருள்.

மலை வாழ்க்கையில் கற்களையே மனிதன் ஆயுதமாகப் பயன்படுத்தினான்.
உலோகத்தாலான ஆயுதங்களை மனிதன் பயன்படுத்தத் தொடங்கியது ‘காட்டு’வாழ்க்கையில்தான். கி.மு மூவாயிரத்தில் எகிப்தியர்கள் உலோக ஆயுதங்களைப் பயன்படுத்திய காலக்கட்டத்திலோ அதற்குச் சற்று முன்னதாகவோ இந்தியர்களும் உலோகப் பயன்பாட்டை அறிந்திருந்ததாக வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய இனங்களுள் தொன்மை மிக்கது தமிழினமே. முதன்முதலாக இரும்பாலான வாளை செய்தவன் தமிழனே. சேக்ஸ்பியர் “இந்திய வாள்” என்று சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.

இப்போது முழுப்பாடலையும் பார்ப்போம்:
பொய்யகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி.


வையகம் போர்த்த வயங்கொலி நீர் என்பது எதைக்குறிக்கிறது ?

நோவாவின் காலத்தில் மிகப் பெரிய கடல்கோள் ஏற்பட்டு பூமி கடலால் சூழப்பட்டது. (நூஹ்) நோவாவின் பேழையில் இருந்த உயிரினங்களைத் தவிர அனைத்து உயிரினங்களும் அழிந்துபட்டன. இதை பைபிள் உள்ளிட்ட மதநூல்கள் தெளிவாகக் கூறுகின்றன. பின்னர், நோவாவின் சந்ததிகளிலிருந்தே மனித இனம் பல்கிப் பெருகியது.

சில காலம் கழித்து வெள்ளம் வடியத் தொடங்கியது. அப்போது, வெள்ளம் வடியவடிய, உயரமான மலைகள் தானே முதலில் தோன்றும். அதன்பிறகே மண் தோன்றும் அல்லவா!

நோவாவின் பேழையில் இருந்தவர்கள் ஆயுதங்களும் வைத்திருந்திருப்பார்கள் அல்லவா! அதில் வாளும் இருக்கத்தானே செய்யும். அதைத்தான் ஐயனாரிதனார் இப்படிக் குறிப்பிடுகிறார்:
வையகம் போர்த்த வயங்கொலி நீர் – கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே’ வாளோடு
முன் தோன்றி மூத்த குடி


நோவா எனப்படும் நூஹ் தமிழினத்தின் ஆதிமூதாதை எனக் கொள்ள இடமளிப்பதாக ஐயனாரிதனாரின் இந்தப் பிரசித்திப் பெற்ற பாடல் உள்ளது.


பின்குறிப்பு: கவிக்கோ அப்துல்ரகுமானின்,கட்டுரையின் இறுதியில் கூறப்பட்டுள்ள இந்தக் குறிப்பு அறுதியிட்டதோ, உறுதிபட்டதோ அன்று. விவாதத்திற்கு இடமளிக்கும் ஒன்றே என்று நான் நினைக்கிறேன்.

(கவிக்கோவின் சிந்தனை என் எழுத்துகளில்)

Thursday, January 06, 2011

எது சிறப்பு!


எது சிறப்பு!

மலரதனின் சிறப்பென்றால் மகிழ்ச்சித் தோற்றம்
மனங்கனியச் செய்வதிலே மிகவும் ஏற்றம்
நிலவதனின் சிறப்பதுவோ நிலைகள் மாற்றம்
நிறைந்தாலும் மறைந்தாலும் நிலைக்கும் ஆற்றல்
உலகமிதன் சிறப்பென்ன? வேறு பூக்கள்
ஒருசேரப் பூத்திருக்கும் இயற்கைப் பூங்கா
உலவுகின்ற தென்றலுக்கும் உண்டே பேறு
உள்ளபடி பொதுவுடமை விளங்கும் காற்றே
.
தலைமையதன் சிறப்பென்றால் தகுதி காத்தல்
தக்கபடி பணிமுடிக்க தேரும் ஆட்கள்
கலைமனதின் சிறப்பிங்கே கற்பின் வாய்மை
கலங்காமல் ஒளிவீசும் கனலின் தூய்மை
அலைமுழக்கம் சிறப்பில்லை: ஆழி என்றால்
ஆழம்தான் சிறப்பாகும் அறிஞர் போல!
நிலைமறந்தே ஆடுவோரின் நினைப்பைக் கூட
நீக்கிவிடும் சிறப்பிங்கே நல்லோர்க் காமே

நண்பர்தம் சிறப்பெல்லாம் நலமே செய்தல்
நம்பிக்கை நீட்டியொரு நேசம் பெய்தல்
மண்ணிதனின் சிறப்பிங்கே மனிதம் ஓங்கல்
மற்றவரும் தன்போன்றே மனதில் கொள்ளல்.
கண்விழிகள் சிறப்படையும் காணும் நோக்கில்
கருத்தான ஏதொன்றும் கவர்ந்துக் கொண்டால்.
பெண்ணவளும் சிறப்பன்றோ பேணும் தாய்மை
பொறுமையினால் அடைகின்றாள் பெரிய வெற்றி.

சிலமனிதர் சிறப்பின்றி சின்ன புத்தி
சிந்தையிலே சுயநலமே செய்யும் உத்தி
பலமனிதர் சிறப்பிங்கே பாவம் ஐயோ.
பண்பாட்டைச் சிதைப்பதிலே பெருமை கொள்வார்
உளமகிழச் செய்வதுவே உயர்ந்தோர் செய்கை
ஒருவரையும் இகழாமல் உணரும் போக்கு.
புலவரிவர் சிறப்பிங்கே பொறுமை காத்து
புகழோங்க கவிவானில் ஒளிரும் பாடல்!

Wednesday, November 03, 2010

இந்தியா - இடைவெளிகளின் தேசம்!

இந்தியா - இடைவெளிகளின் தேசம்!




உலகின் மிகப்பெரிய நகரத்தின் ஒதுக்கப்பட்ட பகுதியாக அந்தச் சேரிப்பகுதி. மும்பையின் ரஃபீக்நகர் தான் அது. மூங்கில் எலும்புகளில் தார்ப்பாய்களை தோலாகப் போர்த்தியிருக்கும் அந்தக் குடியிருப்புகளில் தெளிந்த குடிநீர் கூட கிடைப்பதில்லை. குடிசைக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் பெரிய நீலநிற உருளை வடிவக் கலையங்களில் கலங்கலான பழுப்புநிற நீர், புழுக்கள் மிதக்கக் கிடைக்கிறது. சங்கிலியிடப்பட்டு ஒரு குவளையும் உண்டு.


திட்டமின்மையையும் ஒழுங்கின்மையையும் பறை சாற்றியபடி தலைக்குமேல் செல்லும் சட்ட விரோத மின்னிழைகள் வழியாக ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறது மின்சாரம்.

இதனினும் அவலம் என்னவென்றால், பத்தாயிரம் மக்களுக்கும் மேல் வசிக்கும் அந்தப் பகுதியில் ஒரே ஒரு குளியலறையோ, கழிப்பறையோ கூட இல்லை. ஆனால், நிராதரவான அந்த ஒவ்வொரு குடும்பத்திலும் நவீன இந்தியாவின் நாகரிகக் குறியீடான கைபேசி இருக்கிறது. சிலரிடம் மூன்று கூட.

ஐ.நா கூற்றுபடி கழிவறையினும் கைபேசிகள் மலிந்திருக்கும் ஒரு தேசத்தை, அதன் பயமுறுத்தும் சமச்சீரற்ற வீக்க வளர்ச்சியை; குழப்பியடிக்கும் அந்தப் பாகுபாட்டை நவம்பர் 6ஆம்தேதி வருகை தரும் அமெரிக்க அதிபர் பராக் ஹுசேன் ஒபாமாவும் காணக் கூடும்.

"வளர்ச்சி"யின் அழைப்பு மையங்களாக விளங்கும் கால்சென்டர்கள், மென்பொருள் வடிவமைப்பாளர்கள், தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் நிரம்பியிருக்கும் தேசம்தான் இந்தியா. ஆனால், அதே இந்தியாவில்தான் இலாயக்கற்ற, வெற்றுப்பேச்சு, இனவாத அரசியலும் அமைப்பு முறையும் மக்களின் மிக மிக அடிப்படையானப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு வக்கற்ற அரசுகளும் இருக்கின்றன.

காமன்வெல்த் விளையாட்டுகளில் கூட கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் செய்திகள் நிரம்பிய தேசத்தில், சாமானியனின் அடிப்படைப் பிரச்னைகள் சற்றும் கண்டு கொள்ளப்படுவதில்லை.

தேசத்தின் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 8.5 விழுக்காடு, உலகிலேயே முதன்மையாக அமைந்து வியக்க வைத்தாலும், மேடுபள்ளம் நிரம்பிய இந்தச் சாலைகள் நிச்சயம் சகிப்பதற்கில்லை.

தரணி மெச்சும் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவ சேவையால் ஈர்க்கப்படும் மேற்கத்தியர்கள், மருத்துவச் சுற்றுலாவால் நாட்டின் அந்நியச் செலாவணியை அதிகப்படுத்திக் கொண்டிருக்க, இதே இந்தியாவில்தான் குழந்தை இறப்பு விகிதமும், பிரசவச் சாவுகளும் மிக அதிகம் - ஆஃப்ரிக்காவுக்கு அடுத்தபடியாக.

அரசியல் கட்சிகள், ஆளும் வர்க்கங்களின் விழாக்களிலும் கூட்டங்களிலும் அநியாயமாகவும் தேவைக்கதிகமாகவும் மின்சாரம் விரயமாகிக் கொண்டிருப்பது ஒருபுறமென்றால், அறிவிக்கப்பட்டோ, படாமலோ மின்வெட்டுகள் நாளின் பாதி நேரத்துக்கும் மேல் படர்ந்திருப்பதும் இங்கேதான்.

இந்தியாவின் ஏற்றுமதி வகை அரிசிகள் உலகின் பல நாடுகளிலும் நட்சத்திர அடுக்களைகளில் வெந்து கொண்டிருக்க, வறுமைக் கோட்டினை தன்னுள் இறக்குமதி செய்துகொண்டுள்ள எண்ண வரையற்ற வயிறுகள் பட்டினியால் நொந்துகிடப்பதும் இதே இந்தியாவில் தான்.

பங்குச் சந்தைகளில் குறியீட்டெண்களின் வரைபடம் உச்சபட்ச சாதனை அளவை நெருங்கி நிமிர்ந்திருக்கும் நாட்டில், பலகோடி மக்களின் நாளாந்திர வருமானமோ இரண்டு டாலருக்கும் குறைவுதான்.


ஒருபக்கம் உலகப் பணக்காரர்களில் ஒருவரான அம்பானியின் கோடிக்கணக்கான மதிப்பு விலையுள்ள, 27 மாடிகளும், மூன்று உலங்கு வானூர்தித் தளங்களும் கொண்ட உலகின் உன்னத வசிப்பிடம் இந்தியாவின் செழுமையை சொல்லிக் காண்பிக்க முயலுகிறது. இன்னொரு பக்கமோ, சாக்குத் திரை மறைப்புகளிலும், மண் சேற்றாலும் மாட்டுச் சாணங்களாலும் மெழுகப்பட்ட வீடுகளில் கோடிக் கணக்கானோர் வாழும் அவலம் யதார்த்தத்தைப் பறைசாற்றுகிறது. இதுதான் இந்தியா.

ஏன் இந்த பாரிய இடைவெளி?

இந்த இடைவெளியை ஆட்சியாளர்கள் குறைக்கவோ, போக்கவோ முன்வராதது ஏன்? இயலாமையா? முயலாமையா? செயற்கைக்கோள் விடுவதில் சிறப்பு பெற்ற தேசம் இதை இயலாமை என்றால் பின்னால் சிரிப்பு தான் வரும்.

நகர்ப்புற பகுதிகளின் கழிப்பிட வசதிக்காக ஆண்டுதோறும் அரசால் 350 மில்லியன் டாலர்கள் செலவிடப்படுகின்றன என்கிறார் பிந்தேஷ்வர் பதக். சுலப் சுகாதார சமூக சேவை மையத்தின் நிறுவனர் இவர். "இந்தியாவுக்கு இன்னமும் 12 கோடிக்கும் மேற்பட்ட கழிவறைகள் தேவைப்படுகின்றன - அநேகமாக, உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் இதுவாகத்தானிருக்கும். இன்னொன்றும் தெரிந்துகொள்ளுங்கள். இந்தச் சுகாதாரச் சூழலை ஆட்சியாளர்களால்தான் ஏற்படுத்த முடியும்" என்கிற பதக் தனது அமைப்பின் மூலமாக, கடந்த நாற்பது ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான பொதுக் கழிப்பறைகளை நிறுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

41 வயதான சுரேஷ் பச்சே ஒரு மிதிவாகன இழுப்பாளர். நீர் சுமந்திருக்கும் அந்தக் கலையங்களைக் காட்டி "தண்ணீருக்கும் கூட, அதை வைத்து காசு பார்க்கும் தாதாக்களைத்தான் சார்ந்து இருக்க வேண்டி இருக்கிறது. அரசாங்கம் அந்தப் பணியைச் செய்தால், அந்தப் பணத்தை அரசாங்கம் எடு(த்து)க்கலாமே" என்கிறார். "ஆனால், அரசாங்கம் இங்கு செய்கிற ஒரே ஒரு சேவை வீடுகளை இடித்துத் தள்ளுவதுதான். எனது வீடு கூட 10 முறை இடிக்கப்பட்டிருக்கிறது. ஒரே சிரிப்புதான் போங்க".

ஒருபக்கம் அடிப்படைத் தேவைகளும் நிறைவேறாத கோடிக்கணக்கான மக்கள். இன்னொருபக்கம் கோடிகளில் விற்பனையாகும் கைபேசி உள்ளிட்ட நவீன சாதனங்கள். இந்தியா, தன்னுடைய அபாயமான இந்த வீக்கத்தைப் புரிந்துதான் இருக்கிறதா?

67 கோடி கைபேசி இணைப்புகளை குறுகிய காலத்தில் பெற்றிருக்கும் இதே தேசத்தில்தான் 36.5 கோடி மக்களுக்கு மட்டுமே தனிப்பட்ட கழிவறைகள் இருக்கின்றன. கைபேசி இணைப்புகளின் அளவுள்ள 67 கோடி மக்களுக்கு இன்னமும் திறந்த வெளிதான் என்கிறது ஐ.நாவின் புள்ளிவிவரமொன்று. ஆனால் கைபேசி இணைப்புகளின் வரைபடம் (Graph) மட்டும் மேலேறிச் சென்றுக்கொண்டிருக்கிறது - மாதாந்திரம் 2 கோடி இணைப்புகள் அளவுக்கு.

நவீன இந்தியா பெற்றுத்தந்த நாகரிகக் குறியீடான கைபேசி மூலம் பேசிக்கொண்டே திறந்தவெளி கழிப்பிடத்தை ஒரு மனிதர் பயன்படுத்துவதான காட்சியை நினைத்துப் பாருங்கள். திரைப்படங்களில் அது வெறும் பகடியாக இருக்கலாம். நாட்டின் நகர்ப்புறங்களிலோ அது இன்றைய இந்தியாவைக் குறிக்கவில்லையா?!.

தாராள மயமாக்கலின் கதவுகளைத் திறந்துவிட்ட நவீன இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங் "நம்முடைய இந்த வளர்ச்சி 30 கோடி நடுத்தர வர்க்கத்தை மேலும் மேலும் முன்னேற்றுகிற அதே நேரத்தில் அதனால் ஏழைகளும் பயனடையவே செய்வார்கள்" என்கிறார். "ஆனால், இந்த மாவோயிஸ்ட்டுகள்தாம் முட்டுக் கட்டைகள். ஏழைகளின் வெறுப்புணர்வை விசிறிவிடுகிறார்கள். இவர்கள்தாம் இந்த தேசத்தின் கட்டமைப்புக்கு ஆபத்தானவர்கள்"என்றும் மறக்காமல் சேர்த்துக் கொள்கிறார்.


"குறைந்தபட்சம் குழாய் நீர், சாக்கடை வசதி, இதுகூட இல்லாமல் முன்னேற்றத்தைப் பற்றி என்ன பேச்சு வேண்டி கிடக்கு" என்கிறார் அனிதா பட்டேல் தேஷ்முக். பம்பாயின் சேரிப்பகுதிகளில் இவருடைய "புகார்" அமைப்பு தான் ஆய்வு செய்தது.

இந்த வீக்க நிலை பெரும் அபாயம் தான் என்கிற ஆனந்த் மஹிந்திரா, மஹிந்திரா அன் மஹிந்திரா நிறுவனத்தின் துணைத்தலைவர், ஒரு பெரும் தொழிலதிபர். "இந்த இடைவெளியை அனைவரும் உணர்ந்தே இருக்கிறோம், இதுதான் ஒரு வேளை வளர்ச்சியைத் தூண்டுகிறதோ!"

செல்வ(ந்த)ர்கள் சொல்லத்தான் செய்வார்கள்.

நரசிம்மராவுக்கு முன்புவரை இந்தியா நேரு வகுத்த சோஷலிசப் பாதையில் தான் பயணித்தது. தலைக்கு இத்தனை கடன் என்பது போன்ற பேச்சுகளும், வெளிநாட்டுப் பொருள்கள், வசதிவாய்ப்புகளைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சுகளும் தான் அன்றைய சோஷலிச இந்தியா.

தனியுடமை என்பது பக்க வீக்கமாகவும், பொதுவுடமை என்பது தக்கோரின் ஏக்கமாகவும் மாறிவிடுகிற தேசத்தில் என்னதான் தீர்வு இருக்க முடியும்?

அனைத்து வளங்களும் இறையுடமை; அதற்கு நாம் பொறுப்பாளிகளே என்கிற எண்ணம் மக்களிடத்தே ஊட்டப்படவேண்டும். பயன்படுத்தப் படாமல் எந்த வளமும் வசதியும் வீணாகக் கூடாது. வீணடிப்பதை பற்றியும் நம்மை விசாரிக்க ஒருநாள் வரும், ஒரு மாபெரும் இறைசக்தி உண்டு என்கிற எண்ணம் பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே; உளப்பூர்வமாக ஒவ்வொருவரும் அப்படி உணர்ந்தால் மட்டுமே, அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதால் மட்டுமே இந்த வீக்கங்களும் ஏக்கங்களும் விலகிப்போகும் நிச்சயம்.


அப்படியானால், இதில் அரசாங்கத்துக்கு ஏதும் பங்கில்லையா? என்று கேட்கலாம். அரசாங்கத்திற்குத்தான் பெரும்பங்கு இருக்கிறது. ஆரவாரக் கூத்துகளை விடவும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை கொடுப்பதாக அரசு அமைய வேண்டும். அதற்கு மக்களைப் போலவே, இந்தப் பதவிகளுக்கும் பொறுப்புக்கும் ஒருநாள் தாம் பதில் சொல்லவேண்டியிருக்கும் என்று உணர்கிற ஆட்சியாளர்கள் வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதென்னவோ மக்கள் கையில்தான் இருக்கிறது.


(அரப் நியூஸில் ரவி நெஸ்மேன் எழுதிய கட்டுரையிலிருந்து புள்ளிவிவரத் தரவுகள் பெறப்பட்டன. நன்றி)
இந்நேரம்.காம் இக்கட்டுரையை வெளியிட்டுள்ளது. நன்றி

Thursday, September 09, 2010

ஈத் முபாரக்!





மாதம் ஒன்று மலர்ந்ததுவே
மண்ணில் மனிதம் புலர்ந்ததுவே
வேத வெளிச்சம் படர்ந்திடவே
உள்ளம் தூய்மை அடைந்திடுமே!
நீத நெறிகள் துலங்கியதால்
நன்மை தீமை விளங்கியதே!
மீத வாழ்வும் ஒளிபெறவே
மீட்சி என்றும் இறையிடமே!

பொய்யும் புறமும் அற்றிருந்தோம்
பாவம் தொலைக்கக் கற்றிருந்தோம்.
மெய்யின் மெய்யை அறிந்திட்டோம்
மேன்மை நோன்பைப் புரிந்திட்டோம்
செய்யும் செயலில் உள்ளெண்ணம்
சிறப்பாய் இறையைச் சார்ந்துவிடின்
உய்யும் வழியும் நமதாகும்
உணர வைத்தான் இறையவனே!

நோன்பை சரியாய் வைத்தோரே
நோக்கில் வெற்றி பெற்றோராம்.
தான்தான் என்னும் தன்னலனை
தவிடு செய்தோம் பசித்திருந்தே...
ஆன்ம பலத்தின் பயிற்சிக்கே
அழகுப் பரிசாய் பெருநாளே!
மாண்பு மிக்க வெற்றியிலே
மதிப்பாய் ஈதென் வாழ்த்துகளே!