'எனக்குத் தெரிந்த வாழ்க்கையை விட நீ நல்லவள். வாழ்க்கை பலரை வெறுக்கிறது. சண்டை போடுகிறது. நீயோ எல்லோரையும் அரவணைத்துக்கொள்கிறாய்.' என்று ஒரு கவிஞன் (முகத்திரை அணிந்த)மரணத்தைப் பற்றி எழுதியிருந்தான். எல்லோரையும் பாரபட்சமின்றி ஏற்றுக்கொண்டாலும், மனிதர்கள் மரணத்தை விரும்புவதாயில்லை. பின்னங்கால் பிடறியில் பட மரணத்திலிருந்து தப்ப முடிகிற வழிகளைத் தேடி மனிதர்கள் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள் வாழ்நாள் முழுதும். துருப்புச்சீட்டாக சக மனிதர்களைத் தரவும் அவர்கள் தயங்குவதில்லை.
அடிப்படை ஆதாரமற்ற ஒருசெவிவழித் தொன்மம் நினைவுக்கு வருகிறது.
சாலமன் மன்னரின் அவைக்கு மரணத்தேவன் ஒருமுறை 'மரியாதை வருகை' செய்தபோது அந்த அவையில் அமர்ந்திருந்த ஆள் ஒருவருக்கு வியர்த்துப்போனதாம். மரணத்தேவன் அங்கிருந்துப்போனதும் அவர் சாலமன் மன்னரை நோக்கி, "காற்றுக்கும் கட்டளையிடும் உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி என்னைக் கண்காணாத ஒரு கோட்டைக்கு அனுப்பி விடுங்களேன், மரணத்தேவன் என்னை முறைத்த பார்வை இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது" என்றாராம். அதன்படி அனுப்பி வைக்கப்பட்டாராம்.
பிறிதொரு முறை வருகை தந்த மரணதேவன் சாலமன் மன்னருக்கு 'நன்றி' சொல்ல, சாலமன் கேட்டாராம் "எதற்கு?". " அந்த ஆளை 'உரிய இடத்துக்கு' அனுப்பி வைத்ததற்காக" என்றாராம் மரணத்தேவன்.
இன்னொரு சம்பவமாக, சமீப ஆழிப்பேரலையில் மறைந்துவிட்ட ஒரு தூ..ரத்து உறவினர். பல கல் தொலைவுக்கு அப்பாலுள்ள ஒரு நகரில் ஆடையகம் நடத்தி வந்தார் அவர். எல்லா ஞாயிறுகளிலும் ஊருக்கு வந்துவிடுவார். அந்த கறுப்பு ஞாயிறன்று ஒரு டென்னிஸ் விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு அந்நகரிலேயே அவர் தங்கிவிட நேர்ந்தது.
விளையாடும் களத்தில் வந்த நீரலையை வேடிக்கை என்று நினைத்து.. விபரீதம் உணரும் முன் மரணப்பாலத்தை அவர் கடக்கநேர்ந்ததை இன்றும் நம்ப முடியவில்லை. இத்தனைக்கும் வெறும் மூன்று கல் தொலைவிலிருக்கும் சொந்த ஊரில் வெறுங்கையோடு கடல் திரும்பிப்போக, 90 கல் தொலைவு சென்றவர் மட்டும் சென்றவராகி விட்டார். அங்கும் கடல் இருந்தது. மரணமும்.
இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்: "தலைவிதி, இங்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கு"
வியாதியென்றோ, விபத்தென்றோ, பேராசையென்றோ, போரோசையென்றொ எந்த ஒரு காரணமுமின்றி மரணம் யார்வீட்டுக்கதவையும் தட்டுவதில்லை.
சில மரணங்கள் மா-ரணங்கள்.காலத்தின் அழியாவடுக்கள்.கும்பகோணத்தில் குழந்தையில் கருகிய நம்பிக்கைகளில் பட்ட ம(ன)ரணங்களிலிருந்து பதினெட்டு வருஷம் வெளிநாட்டு வாழ்க்கை போதும் என்று சிங்கப்பூரிலிருந்து வந்து சேர்ந்த அடுத்தநாளே மரணித்த தூரத்து உறவு மாமா வரை.
'எறும்புகள் நசுக்கப்படுவதற்கு என்ன காரணமிருக்க முடியும் - அது எளிது என்பதைத் தவிர' என்று படித்த ஒரு வரி இன்னமும் மனதில் ஊர்ந்துக்கொண்டிருக்கிறது - தினம் தினம் காரணமின்றிக் கொல்லப்படுகிறவர்களை கேட்கவோ, காணவோ நேரிடும்போதெல்லாம்.
அழுகையுடனே அடையாளப்படும் மரணம் சிரிக்கவும் வைப்பதுண்டு. கொடுங்கோலர்களை அது தழுவும்போது குடியானவர்கள் சிரித்து மகிழுகிறார்கள். பாலகர்களை அது உட்கொள்ளும் போதோ, கொடுங்கோலர்களும் துடித்து விடுகிறார்கள். அல்லது கொடூரத்தையே தமது துடிப்பாக்கிக்கொள்கிறார்கள்.
மரணத்துடன் ஆடும் கண்ணாமூச்சியே வாழ்க்கை என்றாலும் இந்த ஆட்டத்தில் வெல்வது தனிவகை.
அது மாட்டிக்கொள்ளாமல் நாள் கடத்துவதிலில்லை. உண்மையைச் சொன்னால், ஈட்டுகிற பெயர் எதுவும், இற்றுப்போகும் உடம்போடு பெயர்ந்துவிடாமல் காலத்தின் சுவரில் கலைச்சித்திரமாகச் செதுக்கி வைக்கிற கைத்திறமையில் தான் அது இருக்கிறது.
காலமெல்லாம் களைப்பின்றி போராடுபவன் செத்தபின் காட்டுகிறான் வெள்ளைக்கொடி.
ஆசாபாசங்கள் தீர்ந்துப்போன அந்த குடுவையை எரிப்பதும் புதைப்பதும் மனித மனத்தின் துருவ முரண்கள்.
தூரத்து நாட்டில் கொடூரமாகக் கொல்லப்பட்ட குழந்தையை விடவும், பக்கத்து வீட்டில் இழுத்துப் பறித்துப் போய்ச்சேர்ந்த முதியவனே அதிக துக்கம் அளிக்கிறான். இத்தகைய 'சார்பு' இருப்பதால் தான் மரணத்தோடு சார்ந்திருக்கின்றன துக்கமும் துயரமும்.
மரணம் தொட்ட இடத்திலிருந்து துயரத்தின் குருதி பெருகுவதன் காரணம் பற்று தான்.
உலகத்திலும், உறவிலும், உடமையிலும் நாம் வைக்கும் பற்று. பற்றினால் விளையும் இப்பக்கவிளைவை எதிர்கொள்ள வரவு வைப்பதே வழி.நற்செயல்களால் நமது 'புத்தகத்தில்' வரவு வைக்க வேண்டும். குறைந்தபட்சம் 'நல்லெண்ணங்களாலாவது'.
அழையா விருந்தாளியாய் உள் நுழைய வாசலிலேலேயே காத்துக்கிடக்கும் மரணம் விஞ்ஞானிக்கு இன்னமும் விந்தை. ஆன்மீகவாதிக்கு அதுவே ஒரு 'பாலம்' தான். கவிஞனுக்கு அது 'கரு'ப்பொருள்.
பயங்கரவாத வெறியாட்டம்
பலியாயினர் அப்பாவிகள்
இலங்கையில் குண்டுவெடித்து
இருநூறு பேர் சாவு
இஸ்ரேல் ஏவுகணை வீச்சு
இழப்பு சில உயிர்கள்
இராக் குழந்தைகள்
ஏராளம் மரித்தன
உணவின்றி
எல்லாமே செய்தியென்று
இருந்துவிட்டுப்போக...
பக்கத்துவீட்டில்
திடீரெனச் செத்தவனோ
பாதி ராத்திரியில்
எழுந்து வருகிறான்
என் தூக்கம் கலைப்பதற்கென்றே!
-------------------------------
முற்றுப்புள்ளிகளை கொஞ்சுபவர்களே!
சற்றேனும் கற்றுணருங்கள்:
வாக்கியத்தின் இனிமை
முற்றுப்புள்ளியில் இல்லை.
நீளமான வாக்கியத்தை
நினைத்தேங்குபவர்களே!
சிறிய வாக்கியமும்
சிறப்புப் பெறுவதுண்டு
குறளைப் போல
எல்லா வாக்கியங்களுக்கும்
இருக்கிறது ஒரு முற்றுப்புள்ளி
என்று சொல்பவர்களே
இருங்கள்,
இடைநிறுத்தக் குறி
ஒருபோதும் முற்றுப்புள்ளியாவதில்லை.
(தேன்கூடு ஜூலை மாதப்போட்டிக்கென இது என் முதல் ஆக்கம்)
என் இதயத்துடிப்புகளைத் தமிழில் இங்குத் தருகிறேன் - பரங்கிப்பேட்டை ஹ.பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
Tuesday, July 11, 2006
Sunday, July 09, 2006
முட்களும் பூக்களும்!
முட்களும் பூக்களும்!
முத்தங்கள் வழியும் பால்யம்
முடிவுக்கு வர
நிராகரிப்பின் முட்களோடு
நீளும் உனது கரம்
வருத்தங் கசிய வைப்பதில்லை
ஒருபோதும்!
உனது மவுனம்
உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறது
சங்கடம் என்றொரு அர்த்தமும்
சம்மதம் தனக்கென்று!
நடக்கப் பழகிவிட்டப் பின்னர்
நான் அறிந்தே வைத்திருக்கிறேன்
நாளை
என் பருவத்தின் பாதையில்
மறுபடி துளிர்க்கும்
உனது கரத்தில்
இருக்கலாம்
எனக்கான பூங்கொத்துகள்!
முத்தங்கள் வழியும் பால்யம்
முடிவுக்கு வர
நிராகரிப்பின் முட்களோடு
நீளும் உனது கரம்
வருத்தங் கசிய வைப்பதில்லை
ஒருபோதும்!
உனது மவுனம்
உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறது
சங்கடம் என்றொரு அர்த்தமும்
சம்மதம் தனக்கென்று!
நடக்கப் பழகிவிட்டப் பின்னர்
நான் அறிந்தே வைத்திருக்கிறேன்
நாளை
என் பருவத்தின் பாதையில்
மறுபடி துளிர்க்கும்
உனது கரத்தில்
இருக்கலாம்
எனக்கான பூங்கொத்துகள்!
Saturday, July 01, 2006
ஏதேன் சீதனம்.
கவிதை:
ஏதேன் சீதனம்.
- இப்னு ஹம்துன்
'வாழ்க்கை'ப்பட்டு வந்த..
எல்லோருக்கும் போலத்தான்
எனக்கும் வழங்கப்பட்டது
ஏதேன் சீதனம்.
கதறியழுதவர் தம்மின்
கண்ணீரினூடே தெரிந்தன
இருப்பின் நியாயமும்..
இறப்பின் அநியாயமும்.
என்றாலும்...
இம்'மை' அநியாயம்
மறு'மை' க்கு நியாயமோ..?
இமைக்க மறந்த ஒரு கணத்தில்
இன்னொரு(வர்) தோளுக்கு
இறங்கிப்போயிருந்தன
சுமைகளும்; சொந்தங்களும்
சொல்லிக்கொள்ளாமலேயே..
ஆள் மாற்றி, தோள் மாற்றி
அனுப்பி வைத்தனர்
'நிலையத்'துக்கு.
எண்ணங்கள்;
எண்ணத்தால் விளைந்த செயல்களன்றி
எதுவுமே சுமந்துக்கொள்ளாமல்
சமாதி வழிப்பயணம்.
வழியனுப்ப வந்தவர்களில்
கனவுக்குமரிகளைத்தான் காணோம்
அடைந்து விட்டவை
சாதனைத்திருமதிகளாய்..
அடையாதவைகளோ
ஏக்கக் கன்னிகளாய்..
குடும்பங்கள்-பொறுப்புக்கள்
கூட்டாளிகள்-தொழில்கள்
கடமைகள் உடமைகள் எல்லாமே
கழற்றி விடப்பட்டிருந்த
கால் செருப்புக்களோடு!
தன் தேகக்கூடு தவிர
தெரிந்துவைத்திராத ஆன்மா
நன்மை தீமைகளின்
நீதிநிலை அறிக்கையை
வழியெங்கிலும்
யோசித்தப்படி..
ஒரு 'நான்' மறைந்துப் போயிருக்க..
வெற்றிடம் 'உண்டாகி'யிருந்தது
நாளை நிரப்பப்படுமோ?....!
-----------------
(குறிப்பு: ஏதேன்என்பது அந்த ஆதி சுவர்க்கத் தோட்டம் தான்- பைபிள் மரபில் ஈடன் என்பது
தமிழில் ஏதேன் ஆனது.)
நன்றி: கீற்று
ஏதேன் சீதனம்.
- இப்னு ஹம்துன்
'வாழ்க்கை'ப்பட்டு வந்த..
எல்லோருக்கும் போலத்தான்
எனக்கும் வழங்கப்பட்டது
ஏதேன் சீதனம்.
கதறியழுதவர் தம்மின்
கண்ணீரினூடே தெரிந்தன
இருப்பின் நியாயமும்..
இறப்பின் அநியாயமும்.
என்றாலும்...
இம்'மை' அநியாயம்
மறு'மை' க்கு நியாயமோ..?
இமைக்க மறந்த ஒரு கணத்தில்
இன்னொரு(வர்) தோளுக்கு
இறங்கிப்போயிருந்தன
சுமைகளும்; சொந்தங்களும்
சொல்லிக்கொள்ளாமலேயே..
ஆள் மாற்றி, தோள் மாற்றி
அனுப்பி வைத்தனர்
'நிலையத்'துக்கு.
எண்ணங்கள்;
எண்ணத்தால் விளைந்த செயல்களன்றி
எதுவுமே சுமந்துக்கொள்ளாமல்
சமாதி வழிப்பயணம்.
வழியனுப்ப வந்தவர்களில்
கனவுக்குமரிகளைத்தான் காணோம்
அடைந்து விட்டவை
சாதனைத்திருமதிகளாய்..
அடையாதவைகளோ
ஏக்கக் கன்னிகளாய்..
குடும்பங்கள்-பொறுப்புக்கள்
கூட்டாளிகள்-தொழில்கள்
கடமைகள் உடமைகள் எல்லாமே
கழற்றி விடப்பட்டிருந்த
கால் செருப்புக்களோடு!
தன் தேகக்கூடு தவிர
தெரிந்துவைத்திராத ஆன்மா
நன்மை தீமைகளின்
நீதிநிலை அறிக்கையை
வழியெங்கிலும்
யோசித்தப்படி..
ஒரு 'நான்' மறைந்துப் போயிருக்க..
வெற்றிடம் 'உண்டாகி'யிருந்தது
நாளை நிரப்பப்படுமோ?....!
-----------------
(குறிப்பு: ஏதேன்என்பது அந்த ஆதி சுவர்க்கத் தோட்டம் தான்- பைபிள் மரபில் ஈடன் என்பது
தமிழில் ஏதேன் ஆனது.)
நன்றி: கீற்று
Subscribe to:
Posts (Atom)