Wednesday, June 28, 2006

கொடை என்றால் இது கொடை!

என் இனிய நண்பரும் எழுத்தாளர் நாகூர் ரூமியின் இளவலுமான ஜாஃபர்சாதிக் அவர்களிடமிருந்து வந்த மின்னஞ்சல் செய்தி:


உலகத்தின் இரண்டாவது பணக்காரரான அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் பஃப்ஃபெட் (Warren Buffett) என்பவர் 37 பில்லியன் டாலர்களை (3,700 கோடி டாலர்கள்) பில் மெலின்டா கேட்ஸ் அறநிலையத்திற்கு (Bill & Melinda Gates Foundation) நன்கொடையாக வழங்கியிருக்கிறார். இது அவருடைய மொத்த சொத்துக்களில் 80 சதவீதத்திற்கு மேலான தொகை என்று சொல்லப் படுகிறது. இத்துடன் இந்த செய்தி பிரசுரமான இன்றைய SAUDI GAZETTE-ன் பகுதியை நகலெடுத்து இணைத்திருக்கிறேன்.



வாரன் பஃப்ஃபெட்டும் கேட்ஸும் மிக நெருங்கிய குடும்ப நண்பர்களாம். பில் மெலின்டா கேட்ஸ் அறநிலையம் வளர்ந்து வரும் நாடுகளில் மலேரியா, காச நோய் போன்ற பலவிதமான நோய்களை தடுக்கவும், அமெரிக்காவின் கல்வி, தொழில் நுட்ப வளர்ச்சி போன்ற பல சேவைகளுக்கு பெருமளவில் ஆண்டுதோறும் நன்கொடை வழங்கிக் கொண்டிருக்கிறது.



நேற்று தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்து சேனல்களை மாற்றிக்கொண்டே “கால்பந்து” செய்திக்காக அலைபாய்ந்து கொண்டிருந்தபோது எதிர்பாராமல் சில நிமிடங்களே பார்க்க நேர்ந்த பி.பி.சி நேர்காணலில், வாரன் பஃப்ஃபெட் “நான் எனது பிள்ளைகளுக்கு எனது சொத்துரிமையை வழங்கும் பழக்கத்தை ஏற்படுத்த மாட்டேன். அவர்களுடைய தேவைகளுக்கு அவர்களே சம்பாதித்துக் கொள்ளட்டும்” என்று கூறியதை பார்த்து வியந்து போனேன். இதை பார்த்த பலரும் வியப்படைந்திருப்பார்கள். வழக்கம்போல நம் குறுக்கு புத்தி ஒரு கேள்வி கேட்கிறது: “இவர்களுக்கு குழந்தைகள் இருக்குமா?” நான் நேர்காணல் முழுதையும் காணவில்லை.



ஒருமுறை ஒரு இந்திய தொழிலதிபர் ஒருவரின் (பெயர் ஞாபகமில்லை) நேர்காணலில் நான் பார்த்த அருமையான பதில் ஒன்று இப்போது ஞாபகம் வருகிறது. அவர் தனது தொழிலில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்வதை பற்றி அலட்சியமாக பதிலளித்தபோது, நேர்காணலைச் செய்தவர் “ உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நீங்கள் பெரிய அளவில் தொழிலை செய்ய வேண்டுமென்ற எண்ணமில்லையா? என்று கேட்டபோது, “நான் எனது பிள்ளைகளை நல்ல கல்வி, பண்பு உடையவர்களாகவும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் திறமையுடவர்களாகவும் வளர்க்கவே விரும்புகிறேன். மாறாக எனது வீடு, நான் சம்பாதித்த சொத்துக்கள், நான் சேமித்த பணம் இவைகளை காக்கும் காவலாளியாக (Watchman) என் பிள்ளைகள் வளர்வதை நான் விரும்பவில்லை” என்றார்.

இந்த நன்கொடையை பரவலாக உலகின் ஏழை நாடுகளில் உள்ள (குறிப்பாக வறுமை, பல வகை பிணிகளில் வாடும் ஆஃப்ரிக்காவுக்கு) அற நிலையங்களுக்கும் சேர்த்து பஃப்ஃபெட் பகிர்ந்தளித்திருக்கலாமே என்ற நெருடல் தோன்றாமல் இல்லை. இவர் இந்த பணக்கார அற நிலையத்திற்கு மட்டும் நன்கொடை செய்த காரணம் எதுவாக இருக்கலாமென்று நினைத்து பார்த்தால், பில் கேட்ஸ் உலகத்தின் முதல் பணக்காரராக இருப்பதால், மேலும் பில்கேட்ஸை நன்கறிந்த நெருங்கிய நண்பராகவும் இவர் இருப்பதால் தன் நன்கொடை முழுதும் நல்ல காரியங்களுக்கு நிச்சயம் பயன்படும் என்ற ஆத்ம திருப்தியாக கூட இருக்கலாம்.

எதுவாயினும், இந்த செய்தி வருவதற்கு முன் பில் கேட்ஸ் என்றால் என் மனதில் ஏற்படும் ஒரு இமேஜ் (உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர் என்ற இமேஜ் பத்திரிக்கைக்காரர்களால் உலக மக்களின் மனதில் பதிக்கப்பட்டதாக இருக்கலாம்) இப்போது உண்மையிலேயே இல்லை. வாரன் பஃப்ஃபெட்டின் முன்பு பில் கேட்ஸின் இமேஜ் ஒரு கொசுவின் இமேஜ்தான் போல்தான் தோன்றுகிறது. ஒரு மனதின் செல்வத்தால் பெரிய ஆளாக ஆக முடியாது தன் நற்செயல்களாலேயே ஆக முடியும் என்று சொல்வார்களே! அது இதுதானே?



அன்புடன்,

சாதிக்

Tuesday, June 20, 2006

மனமுதிர் பருவம்

மனமுதிர் பருவம்
- இப்னு ஹம்துன்

காற்றுடன் பொருதும் வேகம்
காகிதம் போல் மனமாகும்
வேற்றுமை விளங்கா மோகம்
வேறென்ன, வளர்சிதை மாற்றம்.

காட்டாறு போலும் பிரவாகம்
கவலையெலாம் மூழ்கிப்போகும்
வீட்டாரும் வியக்க நடையாகும்
விளைவறியா வாலிப விவசாயம்

கேட்பதெல்லாம் காதில் மோதும்
காதல் ஒன்றே இதயம் சேரும்
நாட்பகலாய் நாகரீகம் நாடும்
நல்லவையோ நகைப்புக்காகும்.

எதிர்பால் ஈர்ப்பு இருக்கும்
ஏதேதோ கவிதை சுரக்கும்
எதிர்மறை எண்ணம் வாய்க்கும்
இராக்கனவு வெட்கம் பூக்கும்.

அழகின் அழகாய் தன்னைப் பார்க்கும்
ஆயிரமாயிரம் நேரம் போக்கும்
வழமைஅழகை வெளியில் தேடும்
உள்ள அழகை உணராப் பருவம்.


போற்றிடும் இலக்கை நோக்கும்
பொறுமையால் வெற்றி சேர்க்கும்
ஆற்றலுயர் இளையர் கூட்டம்
அவனியிலே ஒளியைக் கூட்டும்.